பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

கோடுகளும் கோலங்களும்

“அப்படீன்னு சொல்லுறியா சாந்தி... ?”

“ஆமாம்... முதல்ல ஒரு அஞ்சு நூறு போல புரட்ட வேண்டி இருக்கும். நா ஒரு அம்பது ரூபாச்சீட்டுக் கட்டுறே... பாக்கலாம். முன் வச்சகாலப் பின் வைக்க வேண்டாம். பயிர் வச்சிட்டோம்னா புடுங்கி எறியச் சொல்வாங்களா?”

சாந்தியின் கைகளை நேசமாகப் பற்றிக் கொள்கிறாள்.

“வள்ளிக் கிழங்கு சாப்பிடுங்கக்கா...”

மனத் தெம்புடன் வள்ளிக் கிழங்கை பிட்டுப் போட்டுக் கொள்கிறாள். நல்ல இனிப்பு.

அந்த மனதுடனே அவள் வீடு திரும்புகிறாள். நெல்லு மிசின் பக்கம் தானாகக் கால்கள் நகருகின்றன.

ஆயா பெருக்கிக் கொண்டிருக்கிறாள். புழுங்கல் நீர் கீழே ஓடி ஓடிப் புளித்த கள் வாடையாக மூக்கைத் துளைக்கிறது.

“ஆயா கன்னிப்பன் இல்லையா?”

"எங்கியோ அறுப்புன்னு போனா. வந்தா வாரச் சொல்லுறன்...”

வீட்டில் மச்சான் மாப்பிள்ளை இருவரும் இல்லை.

நீலவேணி வீட்டிலிருந்து இட்டிலி தோசை வாங்கிச் சாப்பிட்டிருக்கிறார்கள். சட்டினி சிறு கிண்ணத்தில் இருக்கிறது. வாங்கி வந்த பாத்திரம் கழுவியிருக்கவில்லை. இவள் புருசன் குளித்துவிட்டுக் கிணற்றடியில் லுங்கியும், பனியனும் போட்டிருக்கிறான். அவரைப் பந்தலடியில் சரோசா நின்று காய் பறிக்கும் சுவாரசியத்தில் இருக்கிறாள்.

“இட்டிலி வாங்கின. ஏனத்தைக் கழுவி வைக்கிறதில்ல? டீ போட்ட வடிக்கட்டி, ஆத்தின ஏனம் எல்லாம் அப்படியே இருக்கு” என்று சிடுசிடுத்துக் கொண்டு அடுப்பில் ஒலைக் குத்தை செருகி எரிய விடுகிறாள். உலையைப் போடுகிறாள். அரிசியைக் கழுவிப் போட்டு, குழம்புக்குப் புளியை எடுக்கையில் அம்மா வருகிறாள்.

"கால நேரத்துல கோவிச்சிக்கிட்டு எங்கயோ போயிட்ட இப்ப பருப்புக் குழம்புக்குக் கூட்டவேணாம். கறி வாங்கிட்டு