பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

139

கையில் அந்தப் பணத்துடன் "கன்னீப்பா... கன்னீப்பா..” என்று ஒடுகிறாள். இல்லை. அவன் பரவி வரும் இருளில் மறைந்து போகிறான்.

இவள் கோபம், சரோவின் மீது திரும்புகிறது. கோபம் புருசனின் மீதுதான். இப்போது, ஆயிரத்தைந்நூறு கொடுத்து இது வாங்க வேண்டியது அவசியமா? பயிர்வைக்க அவள் பிறர் கையை எதிர்ப்பார்க்கிறாள்.

“பரிட்சைக்குப் படிக்க இது அவசியமில்ல? நா இங்க ஒரு வா கஞ்சி குடிக்க கணக்குப் பாத்துக்கிட்டு லோலுப்படுற. நெதியும் ஒட்டல் சாமான்... பாட்டு.. சமீன்தார் வூடு கணக்கா... இது இப்பத் தேவையா? பூமில போட்டா சோறு குடுக்கும். இந்தப் பாட்டக் கேட்டுப் பரிட்சை எழுதி, பாஸ் பண்ணி பொம்புளப் புள்ள சம்பாதிச்சிக் குடுக்கப் போவுது! நாளெல்லாம் அந்தப்புள்ள ஒழச்சிருக்கு. ஆனா இருபது ரூபா கணக்கு பாக்குற...” கண்ணில் கசியும் நீரைத் துடைத்துக் கொண்டு ஆற்றாமையை விழுங்குகிறாள்.

“நீதா இப்ப கச்சி கட்டுற செவந்தி. ஏ நீயுந்தா கேளேன்? இது ஸோனி... ஆயிரத்து நூறுக்கு வந்திச்சி. ரெண்டு மாசமாத் தாரேன்னு வாங்கிட்டு வந்தே. மத்தவங்க சந்தோசப்படுறதே பாத்தா உனக்கு ஏம் பொறுக்கல?”

அவள் பேசவில்லை. பட்டாளத்துக்காரர் வெள்ளிக் கிழமை வருவதாகச் சொல்லி இருக்கிறார். அவள் செய்து காட்ட வேண்டும்.

வெள்ளிக்கிழமை காலையில், வீடு மெழுகுகிறாள். நிலைப்படிக்கு மஞ்சள் குங்குமம் வைக்கும்போது, கணைப்பு குரல் கேட்கிறது.

“நீங்க உக்காருங்கையா, செவந்திம்மா வேர்க்கடல போட்டிருக்காங்க. பாத்தேன். நாமும் பயிர் பண்ணணும்னுதா வந்திருக்கிற. எனக்குப் பழக்கம் இல்ல. பட்டாளத்திலேந்து வந்த பெறகு வடக்க ஆஸ்பத்தரி ஒண்ணுல செக்யூரிட்டியா வேல பாத்தேன். சம்சாரம் சீக்காளி. ஒரு மகளக் கட்டிக் குடுத்து அது பங்களூரில் இருக்கு. சம்சாரம் போய்ச் சேர்ந்திச்சி. ஊரோடு வருவம்னு வந்திட்ட...”