பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

147

வைத்துக் கொண்டு கண்ணாடியில் அழகு பார்ப்பாள். சிறிது விவரம் தெரிந்ததும் தானே சிங்காரித்துக்கொள்ளப் படித்துவிட்டாள். அதே சி.எஸ்.ஐ ஸ்கூலில் பத்து வகுப்புக்கள் வந்திருக்கின்றன. அப்பாவைக் கேட்டு மை, பல வண்ணப் பொட்டுகள், கீரிம், பவுடர், நகச்சாயம் எல்லாம் வாங்கிக் கொண்டிருக்கிறாள். பாவாடை, தாவணிதான் சீருடை. நீலமும் வெள்ளையும். அந்தத் தாவணியும் சட்டையும், அன்றாடம் சோப்புப் போட்டுத்துவைத்து மடிக்க வேண்டும். தாவணி மடிப்பும், தொங்கவிடும் மேலாக்கும் சிறிது கூடக் கலையக் கூடாது. முகம் திருத்தி மை இழுத்துக் கொள்வதற்கும் முடி வாரிப் பின்னல் போட்டு முடிந்து கொள்வதற்குமே அரை மணியாகிறது. லீவு நாட்களில் உச்சியில் ஆணி அடித்துப் பூவைத் தொங்க விட்டாற் போல் ஊசியில் செருகிக் கொண்டு போகிறாள். இன்று காலை சைக்கிளில் சென்றிருப்பது நினைவில் வருகிறது.

ஊடே இனம்புரியாத ஒரு கவலை பரவுகிறது. அவள் சாலையைக் கடக்கையில் விர்ரென்று நாலைந்து சைக்கிள்கள் போட்டாப் போட்டியாய்ப் போவது போல் தோன்றுகிறது. பையன்களும், ஒன்றிரண்டு பெண்களும் இருக்கிறார்கள் என்று புரிகிறது. கண்களை ஊன்றிப் பார்க்கிறாள். லாரிகளும் கார்களும் பஸ்ஸும் போகும் சாலை அது.

பூத் தொங்கினதும், பெரிய பூப் போட்ட தாவணியும் தெரிந்தன. காலையில் சரோ இதே உடைதான் போட்டிருந்தாளா? பள்ளிக் கூடம் இல்லை என்றால், இப்படி விடலைகளுடன் சைக்கிளில் சுற்றுகிறாளா?

சின்னம்மா பெண் இங்கு வந்து அழுததும் சின்னம்மா கெஞ்சியதும் துருத்திக் கொண்டு நினைவுச் செதில்களிடையே காட்சிப் படங்களாய் எழும்புகின்றன.

'யாரோ தொட்டுட்டாப் போல. அடிச்சி வெரட்டிட்டாங்க. இங்க கொண்டாந்துவுட என்ன தைரியம்?'

“இவளே நடத்த இல்லாதவ. மகளையும் அதே வழிக்கு வுட்டுட்டா...” அன்று சின்னம்மாவின் முதுகில் விழுந்த சாட்டையடி தன் மீதே விழுந்து விட்டாற்போல்