பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

151

படிப்புன்னு... என்ன படிப்போ... ஒடம்பு கருத்து எளச்சி போச்சி.... வா கண்ணு...”

அவளை உள்ளே கூட்டி வந்து சோறு போடுகிறாள்.

இரண்டுங்கெட்டான் வயசு, இவளுக்குப் புரியாத படிப்பு. ஒரு புறம், இவளோடு பிணைந்திருக்கும் மரபின் அழுத்தங்கள்....

“அடுத்த வாரம் பரிட்சை முடிஞ்சதும், பாட்டியோடு திருவள்ளுர் அத்தை வீட்டில் போயி ஒரு வாரம் இருந்திட்டு வாங்க. அந்த அத்ததா, வரல வரலன்னு குறைப்படுறாங்க...”

“அங்க போயி என்ன செய்யட்டும்? கொல்லை கழனி சாணி சகதின்னு இதே கதைதான். நா மாமா கூப்பிட்டிருக்காங்க, மதுரைக்குப் போகப் போறேன்.”

“அவன் சும்மா வாய்ச் சொல்லுக்குச் சொல்லிருப்பா... போயிப்பார்த்தாத் தெரியும். சரோ அதெல்லாம் நெஞ்சிலேந்து வந்ததில்லை?”

"இல்ல அங்க அவரு சுலபமா என்ன பாலிடெக்னிக்ல சேர்த்திடுவாரு. மூணு வருசம் எலக்ட்ரிகல் எல்க்ட்ரானிக்ஸ், இல்லாட்டி மெக்கானிக்கல் படிப்பே. நல்ல மார்க் எடுத்தா. ப்ளஸ் டு சேர்ந்து பி.இ. கூட படிக்கலாம்னு மாமா நிச்சயமாச் சொல்லிருக்கார். படிச்சு முடிச்சா, அஞ்சாயிரம் சம்பளம் வாங்குவேன்....”

“அதும் அப்படியா? சரிம்மா! எனக்கு ரொம்ப சந்தோசம்... நீங்க நல்லாயிருகிறத நா வாணான்னு ஏன் தடுக்கிறேன்? அப்படியே உங்க மாமனையே மாப்பிள்ளை பாத்துக் கட்டிக் குடுக்கச் சொல்லு. எனக்கு இந்த மண்ணு போதும்” என்று முடிக்கிறாள். பாட்டி எதுவும் பேசவில்லை.