பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

கோடுகளும் கோலங்களும்

கொண்டிருந்தாள். இப்போது அவள் முறை முடிந்த பிறகு எப்படிப் பேசுவது?

அடுத்தவள் யார் என்று பெயரைக் கவனிக்கவில்லை. ஆங்காங்கே பேச்சுச்சத்தம் அமைதியைக் குலைக்கிறது. ஜனா பாய் மேசையைத் தட்டுகிறாள். அரிமா லாவண்யா அம்மாளும் பெரிய மேடமும் எழுந்திருக்கின்றனர். “நீங்க உக்காந்துக்கங்க. நான் வாரேன்” என்று அவர் மட்டும் எல்லோரையும் பார்த்துச் சிரித்துக்கொண்டே விடை பெறுகிறார். மேடையில் கரண்ட் பிரச்னை அடிபடுகிறது.

“நஞ்சவயல்தான். கிணற்றில் தண்ணிர் கிடக்கு. ஆனால் கரண்ட் கிடைக்கல்ல. மின்ன பதினாலு மணி நேரம் கரண்ட் கிடைச்சிச்சி.இப்ப பத்து மணி நேரமா குறைச்சிட்டாங்க. பேசுறாங்க. எல்லாரும் விவசாயிக்கு மின்சாரம் ப்ரீன்னு. ஆனா, அது எங்கே கிடைக்குது. தொழிற்சாலைக்கு முன்ன குடுக்கறாங்க. எங்களுக்கு பக்கத்துல ஃபாக்டரி இருக்கு. இரும்பு பீரோ செய்யிறாங்க. அதுக்கு எப்பவும் கரண்ட் போகுது. இரும்பு பீரோவவுட பயிரு முக்கியமில்லீங்களா? பயிரு விளஞ்சாத்தான பீரோவுல வச்சுப் பூட்டலாம்.”

எல்லோரும் கைதட்டிச்சிரிக்கிறார்கள்.

“தண்ணியில்லாம முளவாச் செடி காஞ்சி போச்சிங்க. அப்படியே நஷ்டம். போயிப் போயி ஈபி ஆபீசில் இன்ஜினியருங்களப் பார்த்தோம். தான்வா மகளிர் சங்கம் சேந்துபோயிப் பிடிசன் கொடுத்தோம். சில பேரு சொல்றாங்க. திருட்டுக் கரண்டு எடுக்கிறதாம். இல்லாட்ட 'சம்திங்’ குடுக்கிறதாம். அதெல்லாம் நேர்மையா? தான்வா பொண்ணுங்க அப்படியெல்லாம் குறுக்கு வழிக்குப் போகக் கூடாதுன்னு தீர்மானம் வச்சிட்டோம். நமக்கு விவசாயம் முக்கியம்னு கரண்டுக்கு கவர்மெண்ட் வழி செய்யணும்.”

அடுத்து வருபவள் அபிராமவல்லி. மதுராந்தகம் பக்கம். பொத்தேரி கிராமம்.