ஆனால் மனம் அந்த நினைவுகளில் இருந்து அகலவில்லை. அப்பா கிளப்பி விட்டுவிட்டார்.
சின்னம்மாவை ஆசுபத்திரிக்கு எதற்கும் கூட்டிப் போகவில்லை. நர்சம்மா யாரும் வரவில்லை. வீட்டில் அந்த வாசல் திண்ணை அறையில் தான் பெற்றிருந்தாள். குழந்தையின் முட்டைக் கண், அந்தக் கூரில்லாத மூக்கு, சுருட்டை முடி எல்லாம் அதன் அப்பனையே கொண்டிருந்தது. ஆனால், குழந்தை கையிலெடுக்க முடியாத நோஞ்சானாக இருந்தது. பெண்...
“புருசன்தா போனா. ஆம்பிளப் புள்ளையைப் பெத்துக்கக் கூடாதா பொட்டை? இது இன்னும் என்ன பேரக் கொண்டு வருமே” என்று இடித்தார்கள்.
“அவ ஆளான நேரமே சரியில்ல. அதுதா புகுந்த எடம், புருசன் உருப்படல...”
குழந்தை எப்போதும் அழுதது. கைக்குழந்தைக்காரி என்று உட்கார்த்தி வைப்பார்களா?
பொட்டழிஞ்சி போனவ, வேல வெட்டி செய்யாம எப்படி?
வீட்டிலேயே அவளை வாட்டினாள். வயல் வெளிக்குப் போகத் தடை. ஏனெனில் அப்பாவும் அங்கே தானே வேலை செய்வார்? பிற ஆண்கள் இருப்பார்களே?
நடவு, களை பறிப்பு என்று கும்பலாகப் பெண்களுடன் கைக்குழந்தையுடன் போக வேண்டும். நோஞ்சான் பாலுக்கு அழும். தாய்ப்பால் இல்லை.
“ராசாத்தி, புள்ள அழுகுதும்மா. பாலு குடு புள்ளக்கி” என்று சமையல் அறையில் பானை சரித்துக் கொண்டிருந்த தாயிடம் அவர் கொண்டு போனதை அம்மா பார்த்து விட்டாள்.