பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

93

“வெற்றிச்சந்தோசம். அதுக்கு இது ரிகார்டு.”

சரவணனுக்கு வாயெல்லாம் பல்.

“அம்மா, அப்பவே படம் எடுத்திருக்காங்க. நாடிராக்டர்ல உக்காந்து எடுத்திருக்காங்க!”

“அப்படியா? நீயாவது வந்து நிக்கிறியே, சந்தோசம்டா...”

“ஏங்க எங்க இரண்டு பேரையும், எங்களுக்குத் தெரியாமயே எடுக்கணுமின்னே எடுத்தீங்களா? தெரிஞ்சு போஸ் குடுத்தா அது நல்லா இருக்காதே...”

“அதெல்லாம் எனக்குத் தெரியும். நீ கையப் புடிச்சிக் குலுக்கினப்ப கதிர்க்கட்டு, இடுப்பு அரிவா எல்லாம் கச்சிதமா வுழுந்திருக்கு.”

செவந்தி குரலை இறக்கிக் கோபித்துக் கொள்கிறாள்.

“என்ன சாந்தி இது? எங்கூட்டுக்காருக்கு.. இதெல்லாம் ரசிக்காது. இப்பவே ரொம்பப் பேசறதில்ல. உன்னிடம் சொல்றதுக்கென்ன, அன்னிக்கு ரேடியோவப் போட்டு உடச்சிட்டாரு...”

“அதெல்லாம் சரியாப் போயிடும் அக்கா! நான் சொல்றன் பாருங்க! நம்ம செட்ல, நீங்கதா உடனே போட்டு, பலன் எடுத்திருக்கிறீங்க. படம் நல்லா வந்தா இவுங்க போட்டிக்கு அந்தப்படத்த அனுப்பப் போறதாச் சொல்லிருக்காரு...”

செவந்தி ஏதோ ஒரு புதிய உலகில் நிற்பது போல் உணருகிறாள்.

பொன்னின் கதிர்கள்.

பொன்னின் மணிகள்.

வியாபாரி, ரத்தின முதலியார் வந்திருக்கிறார்.

எல்லாக்கதிர்களும் பகல் ஒரு மணிக்குள் அறுவடையாகி வந்து விட்டன. டிராக்டர் தன் பணியைச் செய்துவிட்டுப் போகிறது.

செவந்தி குவிந்த நெல்மணிகளைப் பார்த்து ஊமையான உணர்வுகளுடன் நிற்கிறாள். ஒரு பதர் இல்லை. ஒரு சாவி இல்லை.