பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபுக் கவிதையின் விசால வீதிகளில் கடிவாளமில்லாத புரவியாய் பவனி வரவும் அவரால் முடிந்தது. புதுக்கவிதையின் விசுவ வெளியில் ஒசையின்றி நழுவும் விண்கலமாவதும் அவருக்குச் சாத்தியமானது. மீராவின் கவிதைகள், மூன்றும் ஆறும் முதலிய தொகுதிகள் வெளிவந்த காலத்தில் அவர் எழுதிய மரபுக் கவிதைகள் இளங்கவிஞர்களின் இமை விளிம்புகளில் ஈரத்தையும், வீரத்தையும் விதைத்தன. 'வேலை இருக்கிறது நிரம்ப - என்னை வேகப்படுத்தி விடு தாயே" என்ற வரிகளின் உக்கிரம் எண்ணற்ற இதயங்களில் நெருப்புப் பந்தங்களை ஏற்றி வைத்தது. அப்போதெல்லாம் கவியரங்குகள் திருவிழாக்களாக நடைபெறும். ரகுமானின் சித்திரச் சிலேடைகளும், முருகுசுந்தரத்தின் செந்தமிழ்ச் செழிப்பும், மூத்த கவிஞர் முடியரசனின் சிந்தனைத் தெறிப்பும், சுரதாவின் சிலிர்ப்பூட்டும் உவமையும், தமிழன்பனின் ததும்பி வழிகிற கற்பனையும் விம்மிப் பெருகிக் கொண்டிருந்த சூழலில் புதிய சமுதாயத்தை உருக்கி உருவாக்கும் உலைக்களமாக மீராவின் கவிதைகள் ஒலித்திருக்கும். "கனியைப் பிழிந்திட்ட சாறு - கதியில் உயர்ந்திட யாம் பெற்ற பேறு' என்பாரே பாரதிதாசன், அந்த அனுபவத்தின் சாரம் மீரா அன்று படைத்த மரபுக் கவிதைகள். ஒரு சமதருமச் சமுதாயம் உருவாக வேண்டும் என்று தவித்துத் தவம் கிடந்த அபூர்வமான படைப்பாளிகளில் மீராவுக்குத் தனியிடம் உண்டு. அந்தக் கனவு இன்று வரைக்கும் அவரிடம் சோடை போனதில்லை. முற்போக்கு இயக்கங்களின் மீது தீராத காதலும் மாறாத பற்றும் இந்தச் சிவகங்கைச் செம்மலருக்கு இருந்தன. அதை வெறும் மெளடீகப் பார்வையாக இல்லாமல், மனித குலம் பெற 5