பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டிய பேறு, ஒரு மகத்தான வாய்ப்பு என்று அவர் கருதி வந்திருக்கிறார். இது ஏதோ கட்சிக்கண்ணோட்டம் அல்ல. சக மனிதர்கள் மீது கொண்ட அப்பழுக்கற்ற அன்பின் பிரவாகமே அவரை மார்க்சீய சிந்தனைக்கு இட்டுச் சென்றது. கள் குடிப்பது போல, கஞ்சா தின்பது போல இலக்கியமும் ஒரு போகப் பொருள் என்று கருதுகிற மூடர்களுக்கு இந்த நுட்பம் ஒரு போதும் புலனாகாது. சமூக விமர்சனப் பார்வை மீராவிடம் கூர்மையாகக் குடிகொண்டது. எந்த அளவுக்கு கூர்மை? ஊசி முனைக் கூர்மை! அநாயசமான நகைச் சுவை - அந்த நகைச் சுவைப் பழத்தில் ஒசைப்படாமல் ஊசியேற்றுகிற லாவகம். நவீன தமிழ்க் கவிதையில் ஊசிகள் தனித்தன்மை வாய்ந்த படைப்பு. அரசியலும், சமூக பொருளாதார வாழ்வியலும், மனிதக் கீழ்மையும் இழிப்பு'ச் சுவை கசியக் கசிய மீரா கையாண்ட எடுத்துரைப்பு - ஒரு பரம்பரையை இலக்கிய உலகில் நடமாட விட்டது. பட்டி மன்றம் என்ற சொற்போர்க் கலை சிறுத்துச் சீரழிந்து தன்னைத் தானே கேலிப்பொருள் ஆக்கிக் கொண்ட போது அதை நயமாகக் கேலி செய்தார் மீரா ஊசிகளில், 'பாட்டிசெத்த பத்தாம் வினாடி பெரிய குழப்பம் - பிணத்தை எரிப்பதா புதைப்பதா என்று. உள்ளுர்ப் புலவர் ஓடிவந்தார் பட்டி மன்றம் வைத்துப் பார்த்தால் என்ன என்று' ரகுமான் குறிப்பிட்டுச் சொன்னது போல 'குத்தல்' இருப்பதால் ஊசிகள் என்று மீரா பெயர் சூட்டினார் போலும்!