பக்கம்:கோயில் மணி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

கோயில் மணி

“போதும் அம்மா உன் புலம்பல். எனக்கு வேலை இருக்கிறது” என்று தட்டிக் கழித்து விடுவாள், குமாரி.

தாயும் எத்தனையோ சொல்லிப் பார்த்தாள். குமாரிக்கு இந்தச் சுதந்தர வாழ்வு பிடித்துவிட்டது. வீட்டுக்கு வந்தால் அம்மா உணவு சமைத்து ஆதரவுடன் போடுகிறாள். பள்ளிக்கூடம் போனால் பொறுப்பான வேலைகள் குவிந்திருக்கின்றன. ஒரு நாளில் இருபத்து நான்கு மணி நேரம் போதவில்லை. இதில் கல்யாணம் எதற்கு? சுதந்தரத்தைப் பறி கொடுத்துவிட்டு ஒரு முரட்டு ஆடவன் சொன்ன சொல்லுக்கெல்லாம் அடிமையாக ஆடி நிற்க வேண்டுமா?—அதைப் பற்றி அவள் சிந்திக்க மறுத்தாள். குமாரி, குமாரியாகவே இருந்தாள்.

இருபத்திரண்டாவது வயசில் அவள் வேலையில் புகுந்தாள். சாதாரண வாத்தியாரம்மாவாக இருந்து உயர் நிலைப் பள்ளி ஆசிரியையாகி, இப்போது சில ஆண்டுகளாகத் தலைமை ஆசிரியையாக இருக்கிறாள். அவள் தன் பதவியை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று பாடுபட்டாள். அந்தப் பள்ளிக்கூடத்தில் ஆட்சிக் குழுவினர் அத்தனை பேரும் பெண்மணிகள். ஆகவே, ஆடவர்களோடு அதிகமாகப் பழக வேண்டிய நிலையும் அவளுக்கு இல்லை.

எப்போதாவது ஏதாவது உணர்ச்சி வருமானால் கோயிலுக்குப் போவாள். யாரையாவது சாமியாரைப் போய்ப் பார்த்து வருவாள். இல்லாமற்போனால் கடுமையான விஞ்ஞான நூல் ஒன்றிலே ஆழ்ந்து விடுவாள். பருவத்தின் தளிர்ப்பான காலங்களை இப்படியே போக்கிவிட்டாள். அம்மா இருந்ததும் இந்த விரத வாழ்க்கைக்கு ஒரு பெருந்துணையாக இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/110&oldid=1384095" இலிருந்து மீள்விக்கப்பட்டது