பக்கம்:கோயில் மணி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

கோயில் மணி

மறுநாள் பால்காரருக்கு நூறு ரூபாய் முன்பணம் கொடுத்துச் சமாதானம் செய்து கொண்டோம். அவர் அந்தத் தர்மபுத்திரரே நேரில் வந்து பேசுவது போலப் பேசினர்; “என்ன ஐயா, உங்களை ஒருநாள் இரண்டு நாளாகவா தெரியும்? எத்தனை காலம் நான் பால் ஊற்றுகிறேன்! உங்களுக்குத் துரோகம் செய்வேனா? வீணாக உங்களுக்கு ஏன் சந்தேகம்? ஒவ்வோரிடத்தில் படி இரண்டு ரூபாய்க்கு விற்கிறார்கள். நான் உங்கள் முகத்துக்காக ஒரு ரூபாய் பன்னிரண்டணாவுக்கு ஊற்றுகிறேன். இப்போது மாட்டுத்தீவனம் எல்லாம் என்ன விலை விற்கிறது தெரியுமா? சில நாள் மாடு உதைத்து விடுகிறது. போலீஸ்காரன் மாட்டைப் பவுண்டில் அடைத்து விடுகிறான் நோய் வந்து விடுகிறது. இந்தப் பாழும் மழையில் வைக்கோல் தங்கம்மாதிரி விலை ஏறிப்போன சமாசாரம் உங்களுக்குத் தெரியுமா?”

அவரைப் பேசவிட்டிருந்தால் இரண்டு மணி நேரம் ஒரு நீண்ட சொற்பொழிவே ஆற்றியிருப்பார். “சரி, சரி, இனிமேல் சரியாகப் பால் கறந்து கொடு” என்று சொல்லி உள்ளே வந்து விட்டேன். நூறு ரூபாய் பணத்தோடு அவர் வீடு சென்றார். அடுத்த இரண்டு நாள் நாங்கள் சுமாரான பாலைப் பார்த்தோம்.

என் மனைவிக்குப் பால்காரர் சொன்ன பரிதாப வருணனைகளில் மனம் பாகாய் உருகிவிட்டது; “அவன் சொல்வது நியாமாகத்தான் இருக்கிறது. பாவம்! அவனுக்கு இன்னும்கூட நூறு ரூபாய் தரலாம் என்று படுகிறது” என்றாள்.

எப்படி இருக்கிறது இந்த வேடிக்கை? அவள் தான் ஒவ்வொரு நாளும் அவரோடு சண்டை பிடிப்பது. இப்போது அவளுக்குப் பரிவு பொங்கி வழிகிறது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/34&oldid=1382787" இலிருந்து மீள்விக்கப்பட்டது