56
கோயில் மணி
குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. சுப்பராயன் இன்னும் போய்க் குழந்தையைப் பார்க்கவில்லை. வேலை மிகுதி காரணம் அன்று. லலிதாவிடமிருந்து கடிதமே வரவில்லை. அவள் இப்படி மெளனம் சாதிப்பதற்குக் காரணம் என்ன? அவனுடைய கிண்டல் பேச்சினால் உண்டான கோபமா? என்றும் உள்ள கிண்டல்தானே அது?
“அவள் கடிதம் எழுதட்டும்; போகலாம்” என்று இருந்துவிட்டான். அவள் எழுதவே இல்லை. இரண்டு மாதங்கள் ஆயின. ஆண் குழந்தையாகப் பிறந்திருக்கும் போது போய்ப் பார்க்கவேண்டும் என்ற ஆசை தோன்றாதா?
“குழந்தை என் மாதிரி இருக்கிறதா, உன் மாதிரி இருக்கிறதா? ஏன் நீ கடிதமே எழுதவில்லை? என்னுடைய பரிகாசப் பேச்சுக்களால் உனக்குக் கோபமா? அல்லது ஏதாவது மனக்குறையா?” என்று இரண்டு மூன்று கடிதங்கள் எழுதினான். பதில் இல்லை.
“நீ வா என்றால் வருகிறேன்; இல்லாவிட்டால் வரவில்லை. உன் மகனை நீயே கொஞ்சிக் கொண்டிரு” என்று கோபமாகக் கூட எழுதினான். அப்பொழுதும் கடிதம் வரவில்லை.
இரண்டரை மாதம் கழித்துத் திடீரென்று ஒரு நாள் அவன் மாமனார் ஊரை நோக்கிப் புறப்பட்டுவிட்டான். தன் வரவை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை. திடுதிப்பென்று தன் மனைவியின் முன் போய் நிற்க வேண்டுமென்றே அப்படிப் புறப்பட்டான்.
அந்த ஊர் சென்று மாமனார் வீட்டை விசாரித்துக் கொண்டு போனான் போய்க்கொண் டிருந்தபோது, அவன் காதில் தன் மாமனார் பேர் விழுந்தது. “அந்த வீட்டில் பிறந்திருக்கும் குழந்தையைப் பார்த்தாயோ? அதற்கு என்ன அப்படி—” அதற்கு மேல் ஒன்றும்