பக்கம்:கோவூர் கிழார்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

“அரசர் பெருமான் வஞ்சினங் கூறியது சரிதான். தன்னுடைய வலியையும் மாற்றான் வலியையும் துணை வலியையும் தெரிந்துகொள்ளாமல் அவன் பேசியிருக்கிறான். அந்தப் பேச்சுக்குப் பொருள் இல்லை” என்று மெல்லக் கூறினார் புலவர்.

“பொருள் இல்லை யென்று நாம் சும்மா இருப்பதா? நம்முடைய ஆற்றலை உணரும்படி செய்யவேண்டாமா?” என்று கேட்டான் நலங்கிள்ளி.

“செய்ய வேண்டியதுதான். ஆனால் இதற்காக உடனே படையெடுத்துச் சென்று போரிடுவது நம்முடைய பெருமைக்கு ஏற்றதாகாது. கொசுவைக் கொல்லக் கோதண்டம் எடுத்தது. போலாகும்.”

“பின் என்ன செய்யலாம்?”

“அவன் தான் இருக்கும் இடத்தில் இருந்து என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டிருக்கட்டும். நம்மிடம் வந்தானானால் அப்போது பார்த்துக்கொள்ளலாம்” என்றார் புலவர்.

“அவன் தன் மனம் போனபடி யெல்லாம் பேசிக்கொண்டிருக்க நாம் ஒன்றும் செய்யாமல் இருப்பதா? அது வீரமாகுமா?”

“அவன் வெறும் சொற்களைத்தானே வீசுகிறான்? அதற்கு ஏற்றபடி நாமும் ஏதாவது செய்து சற்றே அச்சமூட்டுவது போதும்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோவூர்_கிழார்.pdf/18&oldid=1089704" இலிருந்து மீள்விக்கப்பட்டது