பக்கம்:கோவூர் கிழார்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

எந்தப் போரிலும் வெற்றியை அடையலாம் என்ற நம்பிக்கை அவனுக்கு உண்டாயிற்று.

அப்போது கூடிய அவையில் படைத் தலைவனும் இருந்தான். அவன் சோழர் படையின் அளவையும் ஆற்றலையும் எடுத்துக் கூறினான். “சோழ நாட்டில் உள்ள ஆடவர் பலர் நம்முடைய படையில் சேரும் விருப்பமுடையவர்களாக இருக்கிறார்கள். நம்மிடம் உள்ள படையே பெரியது. அதனோடு, போரென்று கேட்டவுடன் படையிலே சேரும் தோள்வலி படைத்த காளைகளும் சேர்ந்தால் சிறிதும் ஐயமின்றி எந்த நாட்டையும் வென்றுவிடலாம்” என்று பெருமிதத்தோடு பேசினான்.

போருக்கு வேண்டிய ஆயத்தங்கள் நடை பெற்றன. முன்பே அறிவித்துப் போர் செய்தல் அக்காலத்து வழக்கம். போரிலும் இப்படிச் சில அறங்கள் இருந்தமையால் அறப்போர் என்று சொல்வார்கள். சோழ நாட்டின் தெற்கு எல்லையே பாண்டி நாட்டின் வடக்கு எல்லை. அங்கே முரசை முழக்கிப் பாண்டி நாட்டின்மேல் சோழ அரசன் படையெடுப்பதாக கொண்ட முடிவை அறிவித்தார்கள். போர் செய்ய விரும்பாவிட்டால் பகையரசன் தூதுவர் மூலம் கையுறைகளை அனுப்பிச் சமாதானம் செய்துகொள்வது வழக்கம். பாண்டிய மன்னன் போரை விரும்புகிறவனாகவே காணப்பட்டான். நலங்கிள்ளி இதுகாறும் போர் செய்யாமல் இருந்ததற்கு அவனுடைய வலியின்மையே காரணம் என்று அவன் நினைத்திருந்தான்.