பக்கம்:கோவூர் கிழார்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

யும் அவன் விரும்புவதில்லை. அவன் எது கேட்டாலும் கொடுப்பான். நம் சுற்றத்தாரோடு உண்டு வாழ்வதற்காக ஏதாவது வேண்டுமென்றால் சேரனுக்குரிய வஞ்சி மாநகரத்தையே கொடுப்பான். விறலியர்கள் வந்து கேட்கட்டும்; மாட மதுரையையே தந்துவிடுவான். வாருங்கள், அவனைப் பாடலாம்” என்று அந்தப் பாட்டின் பொருள் விரிகிறது.

ஒரு பாட்டில், நலங்கிள்ளி பாண்டி நாட்டில் உள்ள ஏழெயிலென்னும் கோட்டையைக் கைப்பற்றி அதன் கதவில் தன்னுடைய புலியாகிய அடையாளத்தை எழுதச் செய்த வீரச்செயலைப் பாராட்டினார்.

வெற்றி பெற்ற பெருமிதத்தால் சோழன் பாணர்களுக்கும் விறலியர்களுக்கும் பொருநர்களுக்கும் கூத்தர்களுக்கும் பலவகைப் பரிசில்களை வழங்கினான். புலவர்களுக்கும் சிறந்த பரிசில்களை அளித்தான். புலவர்கள் அவனுடைய போர் வீரத்தையும் கொடைச் சிறப்பையும் பாடினார்கள்.

ஒருவாறு பாண்டியனையும் சேரனையும் பணிய வைத்த பெருமையோடு ஏழெயிலை விட்டுப் புறப்பட்டு, வெற்றி மிடுக்குடன் சோழன் நலங்கிள்ளி மீட்டும் உறையூர் வந்து சேர்ந்தான்.

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோவூர்_கிழார்.pdf/38&oldid=1091021" இலிருந்து மீள்விக்கப்பட்டது