பக்கம்:கோவூர் கிழார்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

இனிமேல் இவனால் நமக்கு எவ்விதமான இடையூறும் நேராது’ என்று சோழனும் அவனுடைய அமைச்சர்களும் எண்ணிவிட்டார்கள். ஆனால் நெடுங்கிள்ளி மாத்திரம் சமயம் வரும் வரையில் பேசாமல் இருக்கும் கொக்கைப் போலக் காத்திருந்தான். நலங்கிள்ளி தென்னாட்டுக்குப் படையுடன் சென்றிருந்த வாய்ப்பான சமயம் கிடைத்தது. பாதுகாப்பு இல்லாமல் இருந்த ஆவூரை எளிதிலே பற்றிக்கொண்டான்.

ஊர்புகுந்த நலங்கிள்ளி இதனைக் கேட்டான். அவனுக்குச் சிரிப்பாக வந்தது. ‘பெரிய பகைவர்களையெல்லாம் மண்ணைக் கவ்வச் செய்துவிட்டு வருகிறோம்; இந்தச் சிறிய மனிதன் நம்மிடம் சிறு குறும்பு செய்கிறானே! பாண்டியனை ஓட்டவும் நம் படையை ஏவுவது; இந்தச் சிறியோனை மடக்கவும் நம்முடைய பெரும் படையை ஏவுவதா?’ என்று அவனுக்குத் தோன்றியது.

நலங்கிள்ளி வழக்கம்போல் தன் அமைச்சர்களின் யோசனையைக் கேட்டான். கோவூர் கிழாரையும் கேட்டான். நெடுங்கிள்ளியிடம் தூதனுப்பி, ஆவூர்க் கோட்டையை விட்டுப் போகாவிட்டால் முற்றுகையிட்டு அவனைச் சிறை பிடிக்க நேரும் என்று சொல்லும்படி செய்வதாக முடிவு செய்தார்கள். அப்படியே ஒருவன் சென்று ஓலையை நெடுங்கிள்ளியினிடம் நீட்டினான். நலங்கிள்ளியின் வார்த்தைகளை அறிந்து அவன் நகையாடினான். “உங்கள் மன்னனுக்கு அஞ்சுகிறவன் அல்லன் நான். எனக்குப் படைப்பலம் உண்டு” என்று விடை கூறி அனுப்பினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோவூர்_கிழார்.pdf/40&oldid=1111054" இலிருந்து மீள்விக்கப்பட்டது