பக்கம்:கோவூர் கிழார்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

வந்தார்கள். அதனால் நலங்கிள்ளி அமைதியாக வாழ முடியவில்லை.

அவன் தன் படையுடன் உறையூரை விட்டுப் போயிருந்த சமயத்தில் நெடுங்கிள்ளி சில வேளிர்களுடைய துணையுடன் உறையூருக்குட் புகுந்து கொண்டான். ஒரு நாளாவது உறையூர் அரண்மனையில் சோழருக்குரிய அரியணையில் அமர வேண்டும் என்பது அவன் ஆசை. அப்படியே அவன் உறையூரிற் புகுந்து அரண்மனையைத் தனதாக்கிக் கொண்டான். ஊரில் உள்ளவர்களால் அதைத் தடுக்க முடியவில்லை. ஆவூர்க் கோட்டையை விட்டுச் சென்ற பிறகு நெடுங்கிள்ளியால் எந்த வகையான இடுக்கனும் நேராது என்று நலங்கிள்ளி எண்ணியிருந்தான். அவனைச் சார்ந்தவர்களும் அப்படியே நினைத்தார்கள். அவனுடைய பகைமைக் கனல் உள்ளே கனன்று கொண்டிருந்ததை அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை.

நலங்கிள்ளிக்கு நெடுங்கிள்ளி உறையூரைக் கைக்கொண்ட செய்தி தெரிந்தது. நெடுங்கிள்ளியை ஒன்றும் செய்யாமல் விட்டது தவறு என்று அவனுக்குத் தோன்றியது. செய்யும் தொழிலிற் குறை வைத்தாலும், பகைவனை அடுவதில் குறை வைத்தாலும் தீயை விட்டு வைத்தாற் போல இறுதியில் அழிவை உண்டாக்கிவிடும் என்று அரசியல் நூல்கள் கூறுவது எத்தனை உண்மை என்பதை இப்போது அவன் தெளிவாக உணர்ந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோவூர்_கிழார்.pdf/57&oldid=1111078" இலிருந்து மீள்விக்கப்பட்டது