பக்கம்:கோவூர் கிழார்.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69

மற்றொரு பாட்டில் ஒரு பொருநன், நலங்கிள்ளி தன் வறுமையை நீக்கியதைச் சொல்லிப் புகழ்வதாகப் பாடியிருக்கிறார். ‘உலகத்திலுள்ள யாவரும் தூங்கவும் தான்மட்டும் தூங்காமல் மக்களுக்கு நன்மை செய்யும் வகைகளை எண்ணி உலகத்தைக் காக்கும் தன்மையுடையவன் நலங்கிள்ளி’ என்று அந்தப் பொருநன் சொல்கிறான்.

பலர் துஞ்சவும் தான் துஞ்சான்
உலகம் காக்கும்.

‘அவன் தனக்குப் பகையாக இருந்த வேந்தர்தளையும் பிறரையும் அழித்துப் போக்கவல்லவன். அது பெரிதன்று. அதோடு, தன்னை வந்து அண்டிய எங்களைப் போன்றவர்களுக்குத் தீராப் பகையாக வாய்த்திருக்கும் பசிப் பகையையும் ஒழிக்கும் வன்மையை உடையவன்’ என்று பாராட்டுகிறான்.

தன் பகை கடிதல் அன்றியும் சேர்ந்தோர்
பசிப்பகை கடிதலும் வல்லன் மாதோ!

நலங்கிள்ளியைப் புகழும் இந்தப் பாட்டுப் புறநானூறு என்ற நூலின் இறுதிப் பாடலாக அமைந்திருக்கிறது. அந்த நூலைப் படித்து முடிக்கின்றவர்கள் கோவூர் கிழாரையும் நலங்கிள்ளியையும் நினைத்துக்கொண்டே புத்தகத்தை மூடுவார்கள்; நானூறு பாடல்களையுடைய அத்தொகை நூலின் இறுதியில் இந்தப் பாட்டைப் பிற்காலத்தில் நூலைத் தொகுத்தவர்கள் வைத்துக் கோத்திருக்கிறார்கள்.