பக்கம்:கோவூர் கிழார்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

”மலையமானுக்குப் பிள்ளைகள் இருக்கிறார்களா?” என்று கேட்டான். சிங்கம் போனாலும் அதன் குட்டிகள் இருந்தால் அவற்றால் தீங்கு நேரும் அல்லவா?

“இரண்டு பேர்கள் இருக்கிறர்களாம்” என்று ஓர் அமைச்சர் சொன்னார்.

“அப்படியா அவர்களும் மலையமானைப் போன்ற வலிமை உடையவர்களா?”

“இல்லை, இல்லை. இரண்டு பேரும் இளங் குழந்தைகள்” என்று விடை வந்தது.

“இளங் குழந்தைகளாக இருந்தால் என்ன? மலையமானுக்குப் பின் அவன் கீழ்த் தோன்றிய இரண்டு முளைகள் இருக்கின்றன. இப்போது குழந்தைகளாக இருக்கும் அவர்களே இன்னும் சில ஆண்டுகள் போனால் பெரியவர்களாகி விடுவார்கள். காசு கொடுக்கிறவனுக்காகச் சண்டை பிடிக்கிற தொழிலை மேற்கொள்வார்கள். ஒரு காரிக்கு இரண்டு காரி புறப்பட்டதுபோல ஆகிவிடும்” என்று மன்னன் கூறினான்.

“எல்லோரும் மலையமான் ஆக முடியுமா?” என்று கேட்டார் ஓர் அமைச்சர்.

“புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? புலியென்று சொல்வது தவறு. அந்த இரண்டு பேர்களும் பாம்புக் குட்டிகள். பாம்பானால் என்ன, குட்டியானால் என்ன? இரண்டும் அச்சத்தை உண்டாக்குவனவே!”