பக்கம்:கோவூர் கிழார்.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

அவன் அரசன்; அவன் சொற்படி நடக்கத்தானே வேண்டும்?

அரசன் ஏவலின்படி மலையமான் திருமுடிக் காரியின் மக்கள் இருவரையும் கொண்டு வந்து விட்டார்கள். அக் குழந்தைகளை யானைக் காலில் இடறிக் கொல்வதாக அரசன் திட்டம் இட்டான். அதற்கு வேண்டியன செய்யக் கட்டளையிட்டு விட்டான்.

இந்தச் செய்தி எப்படியோ வெளியிலே தெரிந்துவிட்டது. புலவர் உலகம் இதை அறிந்து பொருமியது. அந்தக் குழந்தைகளின் உயிரை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்று துடித்தார்கள். அதைச் செய்யும் ஆற்றலையுடையவர் கோவூர் கிழார் ஒருவரே என்று துணிந்து அவரிடம் ஓடிச் சென்று செய்தியைச் சொன்னார்கள்.

அப்புலவர் பெருமான் இதைக் கேட்டவுடன் இடியோசை கேட்ட நாகம் போலானர். “சோழனா இது செய்யத் துணிந்தான்?” என்று கேட்டார்.

“ஆம்! அறம் வளர்வதற்குரிய உறையூரில் வாழும் கிள்ளிவளவன்தான் இந்தத் தகாத செயலைச் செய்ய முற்பட்டிருக்கிறான்” என்று அவர்கள் கூறினார்கள்.

“என் உயிரைக் கொடுத்தாவது அந்தக் குழந்தைகளை மீட்பேன்” என்று சொல்லிப் புறப்பட்டுவிட்டார் கோவூர் கிழார்.