பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

சங்ககாலத் தமிழ் மக்கள்



வாழ்த்துக்களிலும் வாழ்த்துவார்க்கு வரும் இழப்பெதுவுமில்லை. ஆனால், பசிப்பிணி மருத்துவனாய் விளங்கிய பண்னனை வாழ்த்தக் கருதிய கிள்ளி வளவன், தனக்குத் தெய்வத்தால் வரையறுக்கப்பட்ட வாழ்நாட் பகுதியில் இதுகாறும் கழிந்தனபோக, இனி எஞ்சியிருக்கின்ற நாளையும் பண்ணன் தன் வாழ்நாட்களுடன் சேர்த்துப் பெற்று இனிது வாழ்வானாக என வாழ்த்தினான். இச்செயல், தனக்கென வாழாப் பிறர்க்குரியாளனாகிய பண்ணனது ஈகைத் திறத்தையும், அவன் அறச் செயல்களில் ஈடுபட்டுத் தன்னை மறந்து உள்ளமுருகிய வேந்தர் பெருமானாகிய கிள்ளிவளவனது விரிந்த உள்ளத்தின் உயர்வையும் நன்கு தெளிவிப்பதாகும்) நாட்டிற்கு நலஞ்செய்து வரும் மக்களை அறிந்து பாராட்டுதல் அக்காலத்துத் தமிழ் மன்னர்களின் கடமையாய் அமைந்ததென்பதனை இவ்வரலாறு தெளிவுபடுத்துதல் காண்க.

"இப்பிறப்பிற் செய்த அறங்கள் மறுமைக்குப் பயன் தரும்’, எனக் கருதி அறஞ் செய்யும் முறை ஒரு வகை வாணிகமுறையாகவே கருதப்படுமென்பது அறிவுடையார் கொள்கை. பொருள் கொடுத்து அறத்தைப் பெறும் இந்நோக்கம் உயர்ந்த குறிக்கோளெனக் கருதப்படவில்லை. வறுமையான் வருந்துவார்க்கு வேண்டுவன தந்து ஆதரிப்பதனையே அக்காலத் தமிழ்ச் செல்வர்கள் தங்கள் கடமையாக மேற்கொண்டிருந்தார்கள். குளிரால் நடுங்கிய மயிலுக்குப் போர்வை அளித்த பேகனும், தான் படர்தற்குரிய கொழுகொம்பில்லாது தளர்ந்த முல்லைக்கொடி படர்தற்குத் தன் தேரினை வழங்கிய பாரியும், இரவலர்க்குக் குதிரையும் நாடும் கொடுத்தளித்த மலையமான் திருமுடிக்காரியும், தனக்குக்கிடைத்த நீலநிறத்தையுடைய உடையினை ஆலமர் செல்வன் திருமேனிக்கணிந்து வழிபட்ட ஆய் என்பானும்,