பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழர் வாழ்வியல்

57

கொண்ட பெயர் வகையால் வேறுபடாது, ஆங்காங்கு நிகழும் வழிபாடுகள் எல்லாவற்றிலும் வேற்றுமையின்றிக் கலந்து கொண்டார்கள். நிலமக்கள் அனைவரும் ஒன்று கூடிப் பேரூர்களில் வாழத் தொடங்கிய காலத்து எல்லா நிலத்துக்கும் பொதுவான ஒரு வழிபாட்டு முறை தோன்றுவதாயிற்று.

உலகப் பொருள்கள் எல்லாவற்றிலும் நீக்கமறத் தங்கியிருத்தலால் ‘இறைவன்’ எனவும், உள்ளும் புறமுமாகி எல்லாப் பொருளையும் இயக்குதலால் ‘இயவுள்’ எனவும் பண்டை அறிஞர் எல்லாம் வல்ல முழுமுதற் பொருளின் இயல்பினை விளங்க அறிவுறுத்தினர். இன்னவுரு, இன்னநிறம் என்று அறிதற்கரிதாகிய அம்முழுமுதற் பொருளின் இயல்பினை உள்ளவாறு உய்த்துணர்ந்து வழிபடுதல் வேண்டி, வேண்டுதல் வேண்டாமையின்றி நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுகின்ற அச்செம்பொருளைக் குறித்து வழிபடுதற்குரிய அடையாளமாக ஊர் மன்றத்திலே தறியினை நிறுத்தி வழிபட்டார்கள். இதனைக் ‘கந்து’ என வழங்குவர். (கந்து - தறி) மரத்தால் அமைந்த இத்தூண், நாகரிகம் பெற்ற காலத்துக் கருங்கல்லால் அமைக்கப்பெற்று, இறைவனைக் குறித்து வழிபடுதற்குரிய அடையாளமாகக் கொள்ளப்பட்டது. எல்லா நிலத்தார்க்கும் பொதுவாகிய கந்து வழிபாடே பின்னர்ச் சிவலிங்க வழி பாடாக வளர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

இப்பிறப்பிற்குரியனவாகிய இம்மைச் செல்வமும், வரும் பிறப்பிற்பயன் தருவனவாகிய அறச்செயல்களும், பிறப்பற முயலும் பெருநெறியாகிய துறவு நிலையும் ஆகிய இம்மூன்று நிலைகளும் உயிர் வாழ்வுக்குரியனவெனத் தமிழ் மக்கள் எண்ணினர்கள். வையத்துள் வாழ்வாங்கு