பக்கம்:சங்ககிரிக் கோட்டையின் மர்மம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



[8]

சங்ககிரி மலை ஏற ஏற்பாடு!

இரவு படுக்கப்போகு முன்பு மூவரும் அன்றைய நிகழ்ச்சிகளைப் பற்றிக் குதூகலமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். குகையின் ரகசியப் பாதை எங்கு முடிகின்றதென்பதை முன்னதாகவே அறிந்து கொண்டது நல்லது என்றும் நினைத்தார்கள்.

மறுநாள் அதிகாலையிலேயே சங்ககிரி மலைமேல் ஏறிப் பார்க்க முடிவு செய்தார்கள். அதற்கு வேண்டியவாறு தங்களுக்கு உண்டி வகைகளைத் தயாரித்துக் கொடுக்கும்படி கண்ணுப் பாட்டியிடம் கேட்டுக் கொண்டார்கள்.

“பாட்டி, காலை உணவை இங்கேயே முடித்துக்கொண்டு புறப்படுகிறோம். அதனால் மத்தியான உணவை மட்டும் செய்து கொடுங்கள்” என்று தங்கமணி கூறினான்.

“உங்களுக்குச் சிரமம் வேண்டாம் பாட்டி, நானும் சமையல் வேலையில் உங்களுக்கு உதவுகிறேன்” என்று கண்ணகி உற்சாகமாக முன் வந்தாள்.

“சரி, இனி எல்லாம் உப்புமயமாக இருக்கும் - கண்ணகி கை வைத்தால் அவ்வளவுதான்” என்றான் சுந்தரம்.

கண்ணுப் பாட்டி சிரித்தாள், “கண்ணகி கை வைத்தால் எல்லாம் கல்கண்டாக இருக்கும். நாளைக்குப் பாருங்கள்.” என்று அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள்.

“நானும் காய்கறி நறுக்கிக் கொடுக்கிறேன்” என்றான் தங்கமணி.

“உங்களுக்கு சிரமமே வேண்டாம். நானே எல்லாம் செய்கிறேன், சர்க்கரைப் பொங்கல், சாம்பார் சாதம்,

23