பக்கம்:சங்ககிரிக் கோட்டையின் மர்மம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூவரும் சுவருக்குப் பின்னால் என்ன இருக்கிறது. என்று ஆவலோடு பார்த்தார்கள். அங்கே ஒரு சிறிய குகை தென்பட்டது. தங்கமணி டார்ச் விளக்கை உள்ளே காண்பித்தான்.

அதை ஒரு சிறிய குகைபோலக் குடைந்து வைத்திருக்கிறார்கள். அதற்குள்ளே பெட்டி ஒன்று காணப்பட்டது. அந்தக் குகைக்குள்ளே யாரும் நுழைய முடியாது. அவ்வளவு சிறியது அது.

“ஜின்கா” என்று கூப்பிட்டுத் தங்கமணி ஏதோ சமிக்ஞை செய்தான். உடனே ஜின்கா உள்ளே புகுந்து அந்தப் பெட்டியைத் தூக்கி வந்தது.

“இதில் ஏதோ ரகசியம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்படிப் பாறையைக் குடைந்து அதற்குள் பெட்டியை வைத்துப் பிறகு எதற்காகச் செங்கல் சுவர் வைக்கிறார்கள்?” என்று தங்கமணி யோசனையோடு சொன்னான்.

“அதில்தான் புதையல் இருக்குமோ?” என்று சுந்தரம் கேட்டான்.

“புதையலாக இருக்க முடியாது. அப்படி இருந்தால் ஜின்காவால் அதை இவ்வளவு சுலபமாகத் தூக்கிக் கொண்டு வர முடியாது.” என்று தங்கமணி சொன்னான்.

பெட்டியைக் கண்டதும் மூவருக்கும் ஒரே உற்சாகம் ஏற்பட்டு விட்டது. அவர்கள் உற்சாகத்தைக் கண்டு ஜின்கா குதிக்கத் தொடங்கிற்று.

“நாம் பாட்டி வீட்டுக்குப் போய் இந்தப் பெட்டியைத் திறந்து பார்ப்போம்” என்று கூறிவிட்டுத் தங்கமணி அவசரம் அவசரமாகப் புறப்பட்டான்.

34