பக்கம்:சங்ககிரிக் கோட்டையின் மர்மம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



[11]

பெட்டியின் ரகசியம்!

பாட்டி வீடு சென்றதும் சிற்றுண்டி அருந்தக்கூட அவர்களுக்கு எண்ணமில்லை. பெட்டியைத் திறந்து பார்ப்பதையே முதல் வேலையாக வைத்துக் கொண்டார்கள்.

பாட்டியிடம் ஒரு சுத்தியல் கேட்டு வாங்கி தங்கமணி பெட்டியின் பூட்டை உடைத்தான். பல நூறு ஆண்டு களுக்கு முன்பு அந்தக் குகையில் மறைத்து வைத்ததால் அந்த இரும்புப் பூட்டு துருப்பிடித்திருந்தது. அதனால் அது எளிதில் திறந்து கொண்டது. ஆவலோடு மூவரும் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்தார்கள்.

உள்ளே ஒரு வரைபடந்தான் இருந்தது. “பூ, இதுதானா? இதற்கா இத்தனை இரகசியம்?” என்றான் சுந்தரம்.

“முதலில் வரை படத்தை ஆராய்ந்து பார்ப்போம். அதில் ஏதாவது உண்மை கிடைக்கும்” என்று தங்கமணி கூறிவிட்டு அப்படத்தைக் கூர்ந்து கவனித்தான். மற்றவர்களும் அப்படியே ஆவலோடு பார்த்தார்கள்.

அவர்கள் கூர்ந்து பார்ப்பதைக் கண்ட ஜின்காவும் அருகில் வந்து படத்தை உற்றுப் பார்த்தது.

“இதோ, இது புதையல் இருக்கும் இடத்தைக் காட்டும் வரைபடம். சந்தேகமே இல்லை. புதையல் தானியக் கிடங்கின் ஒரு பகுதியில் இருக்கிறது. அந்த இடத்தை இது நன்றாகக் காட்டுகிறது. யாருக்கும் தெரியாதபடி அங்கே ஒரு ரகசிய அறை இருக்கிறது. அதற்குள் புதையலை வைத்து செங்கல் சுவர் வைத்திருக்கிறார்கள்” என்று தங்கமணி உற்சாகத்துடன் சொன்னான்.

“ஆமாம், எனக்கும் நன்றாக இப்போது விளங்குகிறது, பருப்புப் போட்டு வைக்கும் கிடங்கில் அந்த ரகசிய அறை

35