பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

வழை-சுரபுன்னை
ஆக்ரோகார்ப்பஸ் லாஞ்சிபோலியஸ்
(Ochrocarpus longifolius,Bth. & Hk.)

“கோடல் கைதை கொங்குமுதிர் நறுவழை” (குறிஞ்:83) என்று கபிலர் கூற்றில் வரும் ‘வழை’ என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘சுரபுன்னை’ என்று உரை கண்டார். வழை என்பது ஒரு பெரிய மரம். எப்போதும் இலைகள் அடர்ந்து காணப்படும். மலைப் பகுதியில் அடர்ந்த காடுகளில் வளரும். இதன் மலர் வெண்ணிறமானது. நறுமணம் உடையது.

சங்க இலக்கியப் பெயர் : வழை
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : நாகம், புன்னாகம்
பிற்கால இலக்கியப் பெயர் : சுரபுன்னை
உலக வழக்குப் பெயர் : சுரபுன்னை
தாவரப் பெயர் : ஆக்ரோகார்ப்பஸ் லாஞ்சிபோலியஸ்
(Ochrocarpus longifolius,Bth. & Hk.)

வழை-சுரபுன்னை இலக்கியம்

“கோடல் கைதை கொங்கு முதிர் நறுவழை-குறிஞ் : 83

என்றார் குறிஞ்சிக் கபிலர்

“வழைப் பூங்கண்ணி வாய்வாள் அண்டிரன்”

(வாய் தப்பாத)

-புறநா: 132:2

என்றார் ஏணிச்சேரி முடமோசியார். இவ்வரிகளில் கூறப்படும், “வழை” என்பதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியரும், புறநானூற்றுப் பழைய உரையாசிரியரும் ‘சுரபுன்னை’ என்று உரை வகுத்துள்ளார்கள். ‘வழை சுரபுன்னை’ என்று கூறும் நிகண்டுகள்.

“வழை அமல் அடுக்கத்து வலன் ஏற்பு வயிரியர்”

- அகநா. 328:1