102
சங்க இலக்கியத்
இங்ஙனம் வரலாறு படைத்த புன்னையைப் பாடிய பல்லோருள்ளும் உலோச்சனார் நனி சிறந்தவர். இவர் புன்னை மரத்தைத் தாவரவியற் புலவரே போல், புன்னையின் ஓவியந் தருகின்றார். புன்னையின் கரிய கிளைகள் இரும்பை ஒத்த வலிவுடையன. கரும்பச்சை இலைகள், நீல நிறத்தன. வெள்ளி போன்ற பூங்கொத்தின் உள்ளே விளைந்த பொன் போன்ற நறிய தாது, உதிரா நிற்கும். அதில் புலியினது புள்ளியைக் கொண்ட அழகிய வரிவண்டுகள் ஊதி மொய்க்கும்:
இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை
நீலத்து அன்ன பாசிலை அகம்தொறும்
வெள்ளி அன்ன விளங்கு இணர்நாப்பண்
பொன்னின் அன்ன நறுந்தாது உதிர
புலிப்பொறிக் கொண்ட பூநாறு குரூஉச்சுவல்
வரிவண்டு ஊதலின் ............. . . . . . .. . .
-நற். 249 : 1-6
புன்னையின் இலை தடிப்பானது; கரும்பச்சை நிறமானது; நீள்வட்ட வடிவமானது; மேற்புறம் வழவழப்பும் பளபளப்பும் உடையது; கதிரொளியில் மின்னல் போலப் பளிச்சிடும்; அரும்புகள் வெண்ணிறமானவை; உருண்டை வடிவானவை; நிறத்தாலும், வடிவாலும் முத்தை ஒத்தவை என்பர் புலவர்கள்:
“மின் இலைப் பொலிந்த”-அகநா. 80 : 11
“மின் இலைப் புன்னை”-குறுந். 5 : 2
“முத்தம் அரும்பும் முடத்தாள் முதுபுன்னை”[1]
“நெடுங்கால் புன்னை நித்திலம் பூப்பவும்”-சிறுபா. 149
புன்னையரும்பு முத்துப் போன்ற நல்ல வெண்ணிறமுடையதன்று. சற்று மங்கிய வெண்மையாக இருக்கும். இதனையுட் கொண்ட நெடுஞ்சேரலாதனும், இளந்திரையனாரும், கழுவித் தூய்மை செய்யாத முத்தை ஒத்தது புன்னையரும்பு என்பாராயினர்:
“மண்ணா முத்தம் அரும்பிய புன்னை”-அகநா. 30 : 13
- ↑ திணைமொ. ஐ: 50