பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

சங்க இலக்கியத்

இப்புன்னை மரம் தன் கிளைகளை மணலில் படியும் அளவிற்குத் தாழப் பரப்புவதால், மகளிர் கூட்டம் இதன் பூக்களை எளிதில் கொள்ளும் என்பர்:

“நின்ற புன்னை நிலந்தோய் படுகிளை”யின்
“தாதுசேர் நிகர்மலர் கொய்யும் ஆயம்”, ஆடவரும்
“இதன் மெல்லிணர்க் கண்ணி மிலைந்தனர்.”

மேலும், இம்மலர் புலாலின் கெடு நாற்றத்தைப் போக்கவும் செய்யும். சேரியை மணங்கமழச் செய்யும். ஆடவரும், மகளிரும் கொய்து கொண்டு எஞ்சிய மலர்கள், பசிய காயாகிக் காய்த்துத் தொங்கும் என்பர் உலோச்சனார்:

“படுகாழ் நாறிய பரா அரைப்புன்னை
 அடுமரம் மொக்கிளின் அரும்பு வாய் அவிழ
 பொன்னின் அன்ன தாது படுபல் மலர்
 சூடுநர் தொடுத்த மிச்சில் கோடுதொறும்
 நெய்கனி பசுங்காய் தூங்கும் துறைவனை”

-நற். 278: 1-5


மேலும், புன்னைக் கொட்டையில் எண்ணெய் உண்டாகுமென்பதையும் அறிவிக்கின்றார் இப்புலவர்.

கட்டிபெரே’ என்னும் புன்னையின் துணைக் குடும்பத்தில் ஐந்து பேரினங்கள் தமிழ்நாட்டில் உள்ளன என்பர் ‘காம்பிள்’. ‘கலோபில்லம்’ என்ற இதன் பேரினத்தில் நான்கு சிற்றினங்கள் தமிழ்நாட்டில் வளர்கின்றன. புன்னை மரம் தமிழ் நாட்டின் மேற்கு, கிழக்குக் கடலோரப் பகுதிகளில் வளர்கின்றது.

இதன் குரோமோசோம் எண்ணிக்கை: 2n = 32 என, டிக்கியர் (1953) கணக்கிட்டார்.

புன்னை மரம் உண்மையில் இந்திய நாட்டைச் சேர்ந்ததன்று போலும் என்கிறார் ‘காம்பிள்’. இக்கூற்று ஆய்தற்குரியது. பண்டைய சங்கச் சான்றோர், இதனைப் பலபடப் பாடியுள்ளனர். இது நெய்தல் நிலத்திற்குரிய மரம் ஆகும். இறையனார் களவியலுரையில் இம்மரம் நெய்தலின் கருப்பொருளான மரமென்று கூறுகிறது.

இந்த அழகிய மரம், தோட்டங்களில் வளர்க்கப்படுவதுண்டு. பெரிதும் கடற்கரைப்பகுதியில் தானே வளரும் இயல்பிற்று.