பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

பயினி
வட்டேரியா இண்டிகா (Vateria indica,Linn.)

குறிஞ்சிப் பாட்டில் கபிலர், “பயினி வானி பல் இணர்க் குரவம்” (69) என்றார். ‘பயினி’ என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘பயினிப்பூ’ என்று உரை கூறினார். சங்க இலக்கியத்தில் வேறு யாங்கணும் ‘பயினி’ என்பது கூறப்படவில்லை. பிற்கால இலக்கியமாகிய பெருங்கதையில் ‘பயில் பூம் பயினி’ என வரும் சொற்றொடரைக் கொண்டு பார்த்தால் ‘பயினி’ மரத்தில் பூக்கள் அடர்ந்திருக்கும் என்று அறியலாம். வட்டேரியா இன்டிகா என்னும் தாவரப்பெயர் உள்ள மரத்தைப் ‘பயின்’ என்று மலையாள மொழியில் அழைப்பர் என்று காம்பிள் கூறியுள்ளார். இம்மரத்தின் பூக்கள் கொத்தாக உள்ளன. ஆதலின் ‘பயினி’ என்பது வட்டேரியா இன்டிகா என்ற மரமாக இருக்கலாம் என்று எண்ணி இதன் தாவர இயல்புகள் கீழே தரப்படுகின்றன. எனினும், இம்மரம் கபிலர் கூறும் ‘பயினி’ ஆகுமா என்னும் ஐயப்பாடு உள்ளது.

சங்க இலக்கியப் பெயர் : பயினி
பிற்கால இலக்கியப் பெயர் : பயினி
உலக வழக்குப் பெயர் : பயின், வெள்ளைப் பயின், வெள்ளக் குன்றிகம், அடக்கப் பயின் (மலையாள மொழியில்)
தாவரப் பெயர் : வட்டேரியா இண்டிகா
(Vateria indica,Linn.)

பயினி இலக்கியம்

“பயினி வானி பல் இணர்க்குரவம்”- குறிஞ். 69

என்றார் கபிலர். சங்க இலக்கியங்களில் குறிஞ்சிப் பாட்டிலன்றி வேறெங்கும் இச்சொல் பயிலப்படவில்லை. இதற்கு உரை கூறிய நச்சினார்க்கினியர் ‘பயினிப்பூ’ என்றார். இதற்கு மேல் இப்பூவைப் பற்றி யாதும் அறியுமாறில்லை. பெருங்கதையில் மர வரிசையில் இப்பயினி பேசப்படுகின்றது.