பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

குருக்கத்தி-குருகு-மாதவி
ஹிப்டேஜ்-மாடபுளோட்டா (Hiptage madabłota,Gaertn.)

‘குருக்கத்தி’ எனவும் ‘குருகு’ எனவும் சங்க இலக்கியங்கள் கூறும், இக்கொடியினை, ‘மாதவி’ எனவும், ‘கத்திகை’ எனவும் பிற்கால இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ‘குருக்கத்தி’யை ஒரு வலிய கொடி என்ற கூறலாம். தடித்து நீண்டு வளருமாயினும், கொழுகொம்பின்றித் தானாக வளராது. இதன் மலர் வெண்ணிறமானது. இதன் ஓர் அகவிதழ் மஞ்சள் நிறமாக இருக்கும். இதனால் மலர் கண் கவரும் வனப்புடையது.

சங்க இலக்கியப் பெயர் : குருக்கத்தி
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : குருகு
பிற்கால இலக்கியப் பெயர் : மாதவி, கத்திகை
உலக வழக்குப் பெயர் : மாதவிக் கொடி, குருக்கத்தி
தாவரப் பெயர் : ஹிப்டேஜ்-மாடபுளோட்டா
(Hiptage madabłota,Gaertn.)

குருக்கத்தி-குருகு-கத்திகை-மாதவி இலக்கியம்

இதனைக் குறிஞ்சிப் பாட்டில், கபிலர் ‘பாரம் பீரம் பைங் குருக்கத்தி’ (93) என்றார். மாறன் வழுதியும். இதனைப் ‘பைங் குருக்கத்தி’ (நற். 97:5) என்றார். இவற்றுக்கு உரை கூறிய நச்சினார்க்கினியரும் பின்னத்தூராரும் ‘பசிய குருக்கத்திப்பூ’ என்றனர். கடியலூர் உருத்திரங்கண்ணனார். இதனைக் ‘குருகு’ என்பர் (பெரும்பா: 377). இதற்கு நச்சினார்க்கினியர் ‘குருக்கத்தி’ என்று உரை கண்டார்.

திருத்தக்கதேவர் ‘மாதவி’, ‘கத்திகை’ என்ற இரு பெயர்களைச் சூட்டுவர்: