பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

133

இங்ஙனமே பல்யானைச் செல்கெழு குட்டுவனுடைய வெற்றிச் சிறப்பைப் பாடுமிடத்து, அவனது பகைவர் நிலம் நெருஞ்சிக் காடுறு கடுநெறியாகி விட்டது என்று பாலைக்கௌதமனார் கூறுவர்.

“பீர் இவர்வேலிப் பாழ்மனை நெருஞ்சிக்
 காடுறுகடு நெறியாக மன்னிய”
-பதிற். 26 : 10-11

மேலும், பெருவிழா மன்றம் பாழ்பட்ட பின், அவ்விடங்களில் அறுகம்புல்லுடன் நெருஞ்சியின் சிறிய பூக்கள் மலர்ந்து நிற்குமென்று கடியலூர் உருத்திரங்கண்ணனார், கரிகாற் பெருவளத்தானது வெற்றிச் சிறப்பைக் கூறுவர்:

“பெருவிழாக் கழிந்த பேஎம்முதிர் மன்றத்து
 சிறு பூ நெருஞ்சி யொடுஅறுகை பம்பி”

-பட்டின. 255-256


இவற்றால், பாழ்படுத்தப்பட்ட வெற்றிடங்களில் எல்லாம் நெருஞ்சிச் செடி அறுகம்புல்லுடன் வளருமென்பதும், சிற்றிலைகளை உடையதென்பதும், கண்ணுக்கினிய பொன்னிறச் சிறு பூக்களையுடையதென்பதும், இம்மலர்கள் சுடரொடு திரிதரும் இயல்புடையன என்பதும், காட்சிக்கினிய பூக்கள் காய்த்து நெருஞ்சி முள் எனப்படும் நெருஞ்சிப் பழமாகும் என்பதும் கூறப்படுமாறு காணலாம்.

நெருஞ்சி தாவர அறிவியல்

தாவரவியல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரக் குடும்பப் பெயர் : சைகோபிஸ்லேசீ
பேரினப் பெயர் : ட்ரிபுலஸ் (Tribulus)
சிற்றினப் பெயர் : டெரஸ்டிரிஸ் (terrestris, Linn.)
இயல்பு : தரையில் படர்ந்து நீண்டு வளரும் செடி
வளரியல்பு : வெப்ப நாடுகளில் நல்ல நிலத்தில் காணப்படும் மீசோபைட்