பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

149

சிவ பரம்பொருளுக்கு ஒரு பச்சிலை என்று கூவிளத்தின் இலைகளைக் கொண்டு வழிபடுவர். தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் வில்வத்தின் இலைகளைத் தொடுத்த கண்ணியைப் பொன்னால் செய்து அணுக்கத் திருவறையில் அருவுருவாகிய ஆண்டவனுக்குச் சூட்டியுள்ளனர்.

சுந்தரர் இதனைச் சிவபிரான் சூடும் மலராகப் பாடியுள்ளார்.[1] எழு பெரும் வள்ளல்களில் ஒருவரான ‘எழினி’ என்பான், குதிரை மலைக்குத் தலைவன். அவன் தன் அடையாளப் பூவாக இதனைச் சூடினான் என்பர்.

“ஊரனது ஏந்திய குதிரைக் கூர்வேல்
 கூவிளங்கண்ணிக் கொடும் பூண் எழினி”

-புறநா: 158 : 8-9


மேலும், ஒரு தலைமகன் காட்டு மல்லிகை மலருடன் சேர்த்துத் தொடுத்த கண்ணியைச் சூடி வருகுவன் என்பார் பெருங்குன்றூர்க் கிழார்.

“பெருவரை கீழல் வருகுவன் குளவியொடு
 கூவிளந் ததைந்த கண்ணியன் யாவதும்
 முயங்கல் பெருகுவன் அல்லன்”
-நற்: 119 : 8-10

அன்றியும், பகைவரது தலைகளாகிய அடுப்பில், கூவிள மரத்தின் விறகைக் கொண்டு எரிப்பர் என்று புறநானூறு கூறுகின்றது.

“பொருந்தாத் தெவ்வர் அரிந்ததலை அடுப்பில்
 கூவிள விறகின் ஆக்குவரி நுடங்கல்”

-புறநா: 372 : 5-6


கூவிளம்—வில்வம் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : டிஸ்கிபுளோரே
தாவரக் குடும்பம் : ரூட்டேசி
 

  1. நாறு கூவிள நாகுவெண் மதியத்தொடு
     ஆறுசூடும் அமரர் பிரான்-சுந். தேவா: காய்: 3