தாவரங்கள்
155
“பல்வீ படரிய பசுநனைக் குரவம்
பொரிப்பூம் புன்கொடு பொழில் அணிகொளாஅ”
-குறுந்: 341 : 1-2
குருந்த மரம் குவிந்த இணரை உடையது. இதனுடைய போது செழுமையானது. வெண்மை நிறமான இதன் மலரில் நறுமணம் வீசும். பூக்காம்பு குட்டையானது. குறுமலர்கள் பல ஒருங்கே பூக்கும். இம்மலரைத் தெய்வ மலராகத் திருவாசகமும் திருவாய் மொழியும் கூறுகின்றன. இடையர் மகன் சூடிய குறிப்பும் நற்றிணையில் காணப்படும்:
குரவ மரத்தின் காய் சற்றுப் பருத்து நீண்டு சாம்பல் நிறமாகத் தொங்கும். இதனைப் பாவையாகக் கொண்டு மகளிர் தொட்டிலிலிட்டுத் தாலாட்டி விளையாடுவர். இதற்குக் ‘குரவம் பாவை’ என்று பெயர். இதனைச் ‘செய்யாப் பாவை’ என்பதும் உண்டு. இளவேனிற் காலத்தில் இதன் காயைக் கொய்து விளையாடுவர் என்பர்:
“அவரோ வாரார் தான் வந்தன்றே
நறும்பூங் குரவம் பயந்த
செய்யாப் பாவை கொய்யும் பொழுதே”
-ஐங் : (இளவேனிற்பத்து) 344
இக்குருந்த மரத்தின் நீழலின் இறைவன் குருவடிவாக எழுந்தருளித் தம்மை ஆட்கொண்டான் என்று மாணிக்க வாசகர் நெஞ்சுருகப் பாடுவார்.