பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

மலர் : வெண்மை நிறமானது. பல்லிணர்க் குரவம் (குறிஞ். 69) என்புழி பல இதழ்களை உடைய குரவம்பூ என்று நச்சினார்க்கினியர் உரை கண்டுள்ளார். மலர்க்காம்பு சிறியது. நறுமணம் உடையது.
புல்லி வட்டம் : 5 நுண் பற்களை உடையது. பசிய புறவிதழ்கள் இணைந்தது.
அல்லி வட்டம் : அகவிதழ்கள் ஐந்தும் அடியில் குழல் போல் இணைந்தது. மேற்புறத்தில் மடல் விரிந்து இருக்கும்.
மகரந்த வட்டம் : 6-8 மகரந்தக் கால்கள் அடியில் மட்டும் பருத்திருக்கும். தாதுப் பைகள் நீண்டும், சற்று அகன்றும் தோன்றும்.
சூலக வட்டம் : 2-4 சூலிலைகளை உடையது. சூல் தண்டு தடித்தது. சூல்முடி குல்லாய் போன்றது.
கனி : பெரிய நீள் உருண்டை வடிவான சதைக்கனி. கனியுறை வலியது. விதை முட்டை வடிவானது. விதையுறை மெல்லியது. விதையிலைகள் சதைப் பற்றுடையவை.

இதன் அடிமரம் சற்று மஞ்சள் கலந்த வெண்மை நிறமானது. வலிமை உள்ளது. நீலகிரி, ஆனைமலை, திருவிதாங்கூர் முதலியவிடங்களில் காணப்படுமென்பர். இதன் குரோமோசோம் எண்ணிக்கை கணிக்கப்படவில்லை.