பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

சங்க இலக்கியத்

(புறநா : 285 பழைய உரை) இக்கையால் தன் தலையை நீவி, அன்பு காட்டியதை ஔவையார் :

“நரந்தம் நாறும் தன் கையால்
 புலவுநாறும் என்தலை தைவரு மன்னே”
-புறநா: 235 : 8-9

நரந்தம்பூவை மகளிர் தம் கூந்தலிற் சூடுவர். “நரந்தம் நாறும் குவை இருங்கூந்தல்” என்னும் தொடரைப் பரணரும், பனம்பாரனாரும் ஓர் எழுத்தும் மாறாமல் ஆளுகின்றனர்.

“நரந்தம் நாறும் குவைஇருங் கூந்தல்
 இளந்துணை மகளிரொடு”
-அகநா: 266 : 4-5

“நரந்தம் நாறும் குவைஇருங் கூந்தல்
 நிறத்து இலங்கு வெண்பல் மடந்தை”
-குறுந்: 52 : 3-4

ஒரு தலைமகன். தன் காதலியுடன் குலவிய போது, அவளது கூந்தலில் இருந்து நரந்தங்கோதையை விரலால் சுற்றி, மணம் பெற்ற விரலை மோந்து மகிழ்ந்தான் என்பர் :

“நரந்தம் நாறும் கூந்தல் எஞ்சாதுபற்றி
 பொலம்புனை மகரவாய் நுங்கிய சிகழிகை
 நலம்பெறச் சுற்றிய குரல்அமை ஓர்காழ்
 விரல்முறை சுற்றி மோக்கலும் மோந்தனன்”

-கலி: 54 : 5-8
 (நுங்கிய - செய்த; சிகழிகை - தலைக்கோலம்)

மேலும், அந்நாளில் யாழிற்கும் நரந்த மாலை சூட்டப்பட்டதென்றும் கூறுவர்.

“நரத்தப் பல்காழ்க் கோதை சுற்றிய
 ஐதுஅமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ்”

-புறநா: 302 : 4-5


நரந்த மலர் வெண்மையானது; நறுமணம் உடையது; மணம் நெடுநாள் வரை நீடிக்கும். வேங்கை மலருங்கால் இதுவும் மலரும்.

நரந்தம் என்ற புல் ஒன்று உண்டு; இதற்கும் நறுமணம் உண்டு. இதனைக் கவரிமான் விரும்பி மேயும். தாவரவியலில் இப்புல்லுக்கு சிம்போபோகன் சிட்ரேட்டஸ் (Cymbopogan citratus) என்று பெயர். ஆங்கிலத்தில், இதனை லெமன் கிராஸ் (Lemon grass) என்றழைப்பர். இதன் விளக்கவுரையை, ‘நரந்தம்புல்’ என்ற தலைப்பில் காணலாம்.