பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

வேம்பு
அசாடிராக்டா இன்டிகா (Azadirachta indica,A.Juss.)

வேம்பு எனச் சங்க இலக்கியங்கள் கூறும் வேப்ப மரத்தின் பூ பாண்டிய முடி மன்னர்களின் குடிப் பூவாகும் என்று தொல்காப்பியம் கூறுகின்றது. (தொல் : பொ : 60 : 2-5)

சங்க இலக்கியப் பெயர் : வேம்பு
தாவரவியற் பெயர் : அசாடிராக்டா இன்டிகா
(Azadirachta indica,A.Juss.)
தாவரக் குடும்பம் : மீலியேசி

தென் தமிழ் நாட்டில் தொன்று தொட்டு வளரும் இம்மரம், பல்லாண்டுகட்கு வாழும் இயல்பிற்று. மரம் கட்டிட வேலைக்குப் பயன்படும். விதையிலிருந்து எடுக்கப்படும் வேப்ப எண்ணெய் மருந்துக்குப் பயன்படும். இதன் இலைகள் அம்மை நோயினைத் தடுக்கும் ஆற்றலுள்ளவை.

வேம்பு இலக்கியம்

தென் தமிழ் நாட்டினை முறை செய்து காத்த முடி மன்னர்கள் சேர, சோழ, பாண்டியர் ஆவர். இவர்கட்குரிய குடிப்பூக்கள் மூன்று.

சேரனுக்குப் பனம்பூ,
சோழனுக்கு ஆர்ப்பூ (ஆத்திப்பூ),
பாண்டியனுக்கு வேப்பம்பூ

மன்னர்கள் மட்டுமன்றி வீரர்களும் இப்பூக்களைச் சூடிக் கொள்வர். இவ்வீரர் இன்ன அரசனைச் சார்ந்தவர் என்று வேறுபாடு தெரிந்து கொள்ள வேண்டிப் போரின் போது அவரவர் பூக்களைச் சூடிக் கொண்டு ஆர்ப்பர். இதனைத் தொல்காப்பியம் விளக்கும்.