தாவரங்கள்
171
“அவரோ வாரார் தான்வந் தன்றே
வேம்பின் ஒண்பூ உறைப்பத்
தேம்படு கிளவி அவர் தெளிக்கும் பொழுதே”-ஐங்: 350
வேம்பின் பூவைத் தாராக்கி மார்பிலும், கண்ணியாக்கித் தலையிலும், பாண்டிய குலத்தவர் சூடினர். அதனால் பாண்டிய மன்னர், “கருஞ்சினை வேம்பின் தெரியலோன்” (புறநா : 45 : 2) எனப்பட்டான்.
பாண்டிய மன்னர் இப்பூவைக் காட்டிலும் இதன் இளந் தளிரை (குழை)யே மிகுதியும் சூடினர்; அணிந்தனர்; பயன் கொண்டனர். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், கன்னிப் போருக்குப் புறப்பட்டான். மதுரை மூதூரின் வாயிலில் அமைந்த குளத்தில் நீராடினான். பொது மன்றத்து வேம்பின் குழையைச் சூடினான். வெற்றி மடந்தையை நாடிப் புறப்பட்டான் என்கிறார் இடைக்குன்றூர் கிழார்.
“மூதூர் வாயில் பனிக்கயம் மண்ணி
மன்ற வேம்பின் ஒண்குழை மலைந்து
தெண்கிணை முன்னர்க் களிற்றின் இயலி
வெம்போர்ச் செழியனும் வந்தனன்”-புறநா : 79 : 1-4
“.... .... .... .... .... .... .... .... .... திரள் அரை
மன்ற வேம்பின் மாச்சினை ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து
செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி
ஒலியல் மாலையொடு பொலியச் சூடி”-புறநா : 76 : 3-7
பாண்டியன் நெடுஞ்செழியன் போர் முடிந்த நாள் இரவில் புண்பட்டுப் பாசறையில் உள்ள வீரர்களைக் கண்டு ஆறுதல் சொல்லச் செல்கின்றான். ஒவ்வொருவரையும் காட்டுதற்குப் படைத் தலைவன் மன்னனை அழைத்துச் செல்கின்றான். அவன் கையில் வேல் ஒன்றுள்ளது. அதன் தலையுச்சியில் வேப்பிலை செருகப்பட்டுள்ளது என்று கூறும் நெடுநல்வாடை.
“வேம்புதழை யாத்த நோன்காழ் எஃகமொடு
முன்னோன் முறைமுறைகாட்ட”-நெடுந: 176-177
(முன்னோன் - படைத்தலைவன்)
அகத்துறையில் வெறியாட்டு அயரும் வேலன் வேப்பிலை சூடிக் கொள்வான் என்று குறிப்பிடுகிறது அகநானூறு.