பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



181

சிந்திக்கற்பாலது. சங்கத் தமிழில் தேமாவைப் போல, புளிமாவைப் பற்றிய குறிப்புகள் காணுதற்கில்லை.

தேமாவும் புளிமாவும் வெவ்வேறு தாவரக் குடும்பங்களைச் சார்ந்த மரங்களாகும். தேமாவை ‘மாஞ்சிபெரா இன்டிகா’ (Mangifera indica, Linn.) என்றும், புளிமாவை ‘அவெர்கோயா பிலிம்பி’ (Averrhoa bilimbia, Linn.) என்றும் கூறுப. தேமா மரம் ‘அனகார்டியேசீ’ (Anacardiaceae) என்ற தாவரக் குடும்பத்தையும், புளிமா மரம் ‘ஆக்சாலிடேசீ’ (Oxalidaceae) என்ற தாவரக் குடும்பத்தையும் சார்ந்தவை. தேமா மரத்தைத்தான் நாம் மாமரமென்று அழைக்கின்றோம். புளிமா மரத்தைப் புளிச்சக்காய் மரமென்று இந்நாளில் வழங்குவர். புளிமா மரம் சிறு மரம். இது தேமா மரம் போல அத்துணைப் பருத்து வளர்வதில்லை. தேமாங்காய் மாமரக் கிளைகளில் நுனியில் கணுக் குருத்தினின்றும் தோன்றி முதிர்வது. புளிமாங்காய் பலா மரத்தின் காய் போல அடி மரத்தில் தோன்றிக் காய்க்கும். தேமாங்காய் முதிர்ந்தால் பழுக்கும். புளிமாங்காய் பழுப்பதில்லை. தேமா பொதுவாகப் புளிப்புடன் இனிப்புடையது. புளி மாங்காய் புளிப்புடையது.

பழந் தமிழிலக்கித்தில் தேமாவைப் பற்றிய பல குறிப்புகள் உள்ளன. புளிமாவைப் பற்றிய செய்திகள் காணப்படவில்லை. எனினும், பிற்கால யாப்பிலக்கணத்தில் இவ்விரண்டும் சேர்ந்தே பயிலப்படும். யாப்பிலக்கணத்தில் சீர் என்பது செய்யுள் உறுப்பு ஆகும். அசையால் ஆக்கப்படும் அச்சீர் நான்கு வகைப்படும். இவை ஒரசை, ஈரசை, மூவசை, நான்கசை என்பன. குறிலாவது நெடிலாவது தனித்து வரினும் ஒற்றடுத்து வரினும், அவை நேரசையாகும். இரு குறில் தனித்தும், ஒற்றடுத்தும், குறில் நெடில் தனித்தும், குறில் நெடில் ஒற்றடுத்தும் வருவது நிரையசை ஆகும். இவற்றிற்குரிய வாய்பாடுகள் வருமாறு.

நேர் நேர் தேமா
நிரை நேர் புளிமா

ஈரசைச் சீராகிய இவை, மாச்சீர் எனவும் இயற்சீர் எனவும் அகவற்சீர் எனவும் கூறப் பெறும்.

நேர் நேர் நேர் தேமாங்காய்
நிரை நேர் நேர் புளிமாங்காய்

மூவசைச் சீராகிய இவை காய்ச் சீர் எனவும், வெண் சீர் எனவும் வெண்பா உரிச் சீர் எனவும் படும்.