பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



 

கண்ணி–குன்றி
ஏப்ரஸ் பிரிகடோரியஸ் (Abrus precatorius, Linn.)

கபிலர், ‘குரீஇப் பூளை குறுநறுங் கண்ணி’ என்றார் (குறிஞ்: 72) இவ்வடியில் வரும் ‘கண்ணி’ என்பதற்குக் ‘குன்றிப்பூ’ என்று உரை கண்டார் நச்சினார்க்கினியர். இக்காலத்தில் இது குன்றி மணி என வழங்கப்படுகின்றது. குன்றி மணி பெரிதும் செந்நிறமானது. இதுவன்றி, சற்று மங்கிய வெண்ணிறமான குன்றி மணியும், தூய வெண்ணிறமான குன்றி மணியும், நன்கு கறுத்த கருநிறமான குன்றி மணியும் உண்டு. இவையனைத்தும் தாவரவியலில் ஒன்றாகவே கருதப்படுகின்றன.

சங்க இலக்கியப் பெயர் : கண்ணி
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : குன்றி
உலக வழக்குப் பெயர் : குன்றி, குன்றிமணி
தாவரப் பெயர் : ஏப்ரஸ் பிரிகடோரியஸ்
(Abrus precatorius, Linn.)

கண்ணி–குன்றி இலக்கியம்

குறிஞ்சிக் கபிலர் ‘குரீஇப் பூளை குறுநறுங் கண்ணி’ (குறிஞ்: 72) என்று இதனைக் குறிப்பிட்டுள்ளார். நச்சினார்க்கினியர் இதற்குக் ‘குன்றிப்பூ’ என்று உரை கூறினார். பாரதம் பாடிய பெருந்தேவனார், ‘குன்றி ஏய்க்கும் உடுக்கை’ (குறுந். 1 : 3) என்றும் குன்றிக்கொடியில் விளையும் விதையைக் கூறினார். முருகப் பெருமானது சிவந்த ஆடைக்குக் குன்றிமணி உவமையாகக் கூறப்பட்டது. திருவள்ளுவர் குன்றியின் சிவந்த விதையைக் ‘குன்றி’ என்று கூறுவர்.