பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

சங்க இலக்கியத்

நறுமணம் உள்ளது. சிவபெருமானுக்குரியது. பூசைக்குரிய எண் வகை மலர்களில் ஒன்று. சிவபெருமான் நிறத்தைக் குறிக்கும் பொருள்பட மலர்ந்த, ‘பெருந்தண் சண்பகம்’ என்றார் நல்லந்துவனார். சூரர் மகளிர், வேண்டுவனவற்றைக் கூட்டி முற்ற முடித்த குற்றமற்ற கொண்டையிலே பெரிய குளிர்ந்த சண்பகப் பூவைச் செருகினார் என்பர் நக்கீரர். ஒரு சில மலரழகைப் புலப்படுத்தும் திருத்தக்க தேவர், இப்பூவின் வடிவமைப்பையும் நிறத்தையும் சேர்த்து, ஓர் உவமையால் விளக்குகின்றார்:

“ஓடுதேர்க்கால் மலர்ந்தன்ன வகுளம், உயர்சண்பகம்
 கூடுகோழிக் கொடுமுள்ளரும்பின்”[1]

சண்பக மலர் அலர்ந்த போழ்து போர்ச் சேவலின் காலில் உள்ள (முள்ளை) நகங்களைப் போன்றிருக்கும் என்று வடிவத்தையும் மஞ்சள் பாவிய செம்மை நிறத்தையும் அப்படியே குறிப்பிடுகின்றார். வண்டுறை மலர்களின் பட்டியலில், இப்பூவும் இடம் பெற்றுள்ளது. ‘வண்டறைஇய சண்பகம்’ என்பார் பரிபாடலாசிரியர் (பரி. 11:18).

கவி மரபில், இதனை மகளிர் நிழல் பட்டால் மலரும் என்பர். எனினும், கட்டியங்காரன் இறந்ததும் அவனது உரிமை மகளிர் நோன்பு மேற்கொண்டதைக் கூறும் திருத்தக்கத் தேவர், இவர்களைச் சண்பகப் பூவின் வாடலுக்கு உவமித்துள்ளார்.

“தாதார்க் குவளைத் தடங்கண் முத்துருட்டி விம்மி
 மாதார் மயில் அன்னவர் சண்பகச் சாம்பலொத்தார்”[2]

தாவரவியலில் சண்பகம் மக்னோலியேசி (Magnoliaceae) என்னும் குடும்பத்தைச் சார்ந்ததாகும். இக்குடும்பத்தில் 18 பேரினங்களும் ஏறக்குறைய 300 இனங்களும் உள்ளன. இவை பெரிதும் ஆசியாவின் வெப்ப நாடுகளிலும் அமெரிக்காவிலும் காணப்படுகின்றன. இவற்றுள், இந்தியாவில் 8 பேரினங்கள் வளர்கின்றன என்பர் ‘ஹுக்கர்’ . தாவரவியலில் சண்பக மரத்தை ‘மைக்கீலியா’ என்றழைப்பர். இப்பேரினத்தில் 8 சிற்றினங்கள் இந்தியாவில் உள்ளன. நீலகிரியில் வாழும் ‘மைக்கீலியா நீலகிரிகா (Michelia nilagirica) என்ற சிறுமரம், ‘சண்பகம்’ என்றே அழைக்கப்படுகிறது. இதன் மலர் வெண்மையானது. அகவிதழ்களில் உட்புறம் மஞ்சள் நிறமாக இருக்கும்; சிறந்த மணமுள்ளது. இவ்விரண்டு மலர்களுமே மாலையாகக் கட்டிச் சூடிக் கொள்ளப்படும்.


  1. சீ.சிந். 1650
  2. சீ.சிந். 2349