பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

சங்க இலக்கியத்

மலர் உடையது செருவிளை. இதன் பதாகையிதழ் 4 செ.மீ. X 4 செ. மீ. இதன் குறுகிய அடியில் உட்புறத்தில் மஞ்சள் நிறமானது. இதில் கையன்ன நரம்புகள் மேல் நோக்கி எழும். இதன் இரு சிறகிதழ்கள் 2 செ.மீ. X 1 செ.மீ. ஒட்டினாற் போலிருக்கும் . இவற்றினுள் கீழிதழ்கள் இரண்டும் இணைந்து மகரந்த வட்டத்தை மூடியிருக்கும்.
மகரந்த வட்டம் : இரு தொகுதியாக இருக்கும்
சூலக வட்டம் : ஓரறைச் சூலகம். பல சூல்கள். சூல் தண்டு உள்வளைந்திருக்கும். நுனியில் நுண் மயிரிழைகள் காணப்படும்.
கனி : நீண்ட தட்டையான வெடிகனி. பல விதைகளை உடையது.

நீல மலர்களை உடையவை கருவிளை ஆகும். வெண்ணிற அல்லி இதழ்களை உடைய மலர்களைத் தரும் கொடி செருவிளை எனப்படும். இவையிரண்டையும், தாவரவியலில் ஒரே டர்னாட்டியா இனத்தில் அடக்குவர். எனினும், வெண்ணிறப் பூக்களையுடைய செருவிளை, கருவிளையினின்றும் வேறுபட்ட ஒரு வகை (variety) என்று கருதப்படுகிறது.

வெண்காக்கணமாகிய செருவிளைக்கும் தாவரவியலில் இப்பெயரே வழங்கும். செருவிளையும் புதர்களில் ஏறிப் படரும் கொடியே. எனினும், இதில் உண்டாகும் மலரின் நிறம் வெண்மையானது. சங்க இலக்கியங்களில் ‘செருவிளை’ என்ற பெயர், குறிஞ்சிப் பாட்டில் மட்டும் காணப்படுகிறது. இக்கொடி கருவிளையுடன் சேர்ந்தும், தனித்தும், வேலிகளிலும், புதர்களிலும் ஏறிப் படரும் சுற்றுக் கொடி. மேலும், கருவிளையைப் போன்று இது மிகுந்து காணப்படுவதில்லை.

பொதுவாக கிளைடோரியா என்ற இப்பேரினம் வெப்ப நாடுகளில் வளர்கிறது என்றும், அதிலும் மேலை நாடுகளில் மிகுத்துக் காணப்படும் என்றும் கூறுப. கருவிளையின் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 16 என்று ஹீசாப், கப்ரமேனோ (1932), ஜகாப் (1940), ஃபிராம் லெவிவெல்டு (1953), சரோஜா (1961), ஹிபாட்டா (1962, 1983) முதலியோர் கூறுவர்.

இது காறும், செருவிளையைத் தனித்துப் பிரித்து ஆய்ந்தார் எவருமிலர் என்று தெரிகிறது.