பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

வேங்கை
டீரோகார்ப்பஸ் மார்சூப்பியம்
(Pterocarpus marsupium,Roxb.)

சங்க இலக்கியங்கள் சிறப்பித்துக் கூறும் மிக உயரமாக வளரும் பெரும் மரம் வேங்கை. மஞ்சள் நிறமான பூக்கள் எரிகொப்பு விட்டாற் போன்ற செம்மையும் மஞ்சளும் கலந்த பொன்னிறமாகத் தோன்றும். இம்மரம் பூத்த பொழுதில் வேங்கை வரிப் புலியை ஒத்துத் தோற்றம் அளிப்பதால் மகளிர் இதனைப் ‘புலி, புலி’ என்று ஆரவாரம் செய்து கூச்சலிடுவர்.

இம்மரம் மகளிர் போடும் ‘ஏமப்பூசலை’க் கேட்டு வளைந்து கொடுக்கும் என்ற கருத்து உண்டு. இதில் ஏதோ ஓர் உண்மை புதைந்துள்ளது.

சங்க இலக்கியப் பெயர் : வேங்கை
தாவரப் பெயர் : டீரோகார்ப்பஸ் மார்சூப்பியம்
(Pterocarpus marsupium,Roxb.)

வேங்கை இலக்கியம்

சங்க இலக்கியங்களில் வேங்கை மரத்தைப் பற்றிய குறிப்புகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. ‘ஓங்குநிலை வேங்கை’ எனவும், ‘பெருவரை வேங்கை’ எனவும், ‘கருங்கால் வேங்கை’ எனவும் பேசப்படும் இம்மரம், மலைப்பாங்கில் பரவிக் கிளைத்துத் தழைத்து வளரும். நல்ல நிழல் தரும். இதன் நிழலில் மகளிர் விளையாடுவர். குறவர் குரவைக் கூத்தாடுவர். மகளிர் மூங்கிற் குழாயிற் புளித்த தேறலைப் பருகிக் குரவை அயர்வர் என்பர் புலவர் பெருமக்கள்.

“வாங்கமைப் பழுகிய தேறல் மகிழ்ந்து
 வேங்கை முன்றிற் குரவை அயரும்
-புறநா. 129 : 2-3