பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

சங்க இலக்கியத்

களைக் கவனமாக ஊட்டும் என்பர் பாலை பாடிய பெருங்கடுங்கோ. (நற். 202 : 3-6)

வேங்கைப் பூவை வண்டுணா மலர் என்று கூறும் பிங்கலம். எனினும், வண்டுபடு வேங்கையின் மலரைக் கண்ணியாகச் சூடி வருகிறான் தலைவன் என்று கூறும் அகநானூறு.

“விரியினர் வேங்கை வண்டுபடு கண்ணியன்”
-அகநா. 38 : 1


கருங்களிறு ஒன்று வேங்கை மரத்தடியில் புலியுடன் பொருது வென்றது. தனது எய்ப்பு நீங்கத் தன் துதிக்கையைத் தூக்கிப் பெருமூச்சு விட்டது. இம்மூச்சுக் காற்றால் வேங்கைப் பூக்கள் சிதறிப் பாய்ந்தன. இக்காட்சி, கொல்லன் ஊது உலையில் பிதிர்ந்து எழும் நெருப்புப் பொறி பாய்வது போன்று இருந்தது. பாய்ந்த பொறிகள் பக்கத்திலிருந்த கரும்புதரில் படிந்த காட்சியோ, மின்மினிப் பூச்சிகள் தாவிப் பறந்ததை ஒத்திருந்தது என்று சித்திரம் செய்கின்றார் அகநானூற்றில் கண்ணனார் எனும் புலவர்:

“புலிப்பகை வென்ற புன்கூர் யானை
 கல்லகச் சிலம்பில் கையெடுத் துயிர்ப்பின்
 நல்லிணர் வேங்கை நறுவீ, கொல்லன்
 குருகு ஊதுமிதி உலைப்பிதிர்விற் பொங்கிச்
 சிறுபல் மின்மினிப் போலப் பலவுடன்
 மணிநிற இரும்புதல் தாவும் நாட”
-அகநா. 202 : 3-8

இங்ஙனமாகப் புலவர்கள் வேங்கை மரத்தைப் பற்றிக் கூறுவன எல்லாம் தாவரவியலுண்மைகளுக்கு ஒத்துள்ளன.

வேங்கை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே (Calyciflorae)
தாவரக் குடும்பம் : பாப்பிலியோனேட்டே (Papilitionatae)
தாவரப் பேரினப் பெயர் : டீரோகார்ப்பஸ் (Pterocarpus)