பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250

சங்க இலக்கியத்

“சினைதலை மணந்த சுரும்புபடு செந்தீ
 ஒண்பூம் பிண்டி அவிழ்ந்த காவில்”

-மதுரைக். 700-701

“சினையெலாம் செயலை மலர-பரிபா. 15 : 31

“எரிநிற நீள் பிண்டி இணர் எல்லாம்
 வரிநிற நீள் வண்டர் பாட”
[1]

மேலும் திருமங்கையாழ்வார், ஒரு கற்பனை செய்கின்றார். ‘நெருப்பை ஒத்து மலர்ந்த இம்மலர்களைப் பார்த்த வண்டினம் மரம் எரிவதாக எண்ணி அஞ்சும்’ என்கிறார்.

“தாதுமல்கிய பிண்டி விண்டு அலர்கின்ற
 தழல் புரை எழில் நோக்கி
 பேதை வண்டுகள் எரிவன வெருவரும்”
[2]

செக்கச் சிவந்த இதன் மலர்களையும், செவ்விய இதன் தளிர்களுடன் காதில் செருகி அணிவர் என்பர் புலவர்கள்:

“. . . . . . . . . . . . . . . . . . . ஞாலச் சிவந்த
 கடிமலர்ப் பிண்டி தன்காதில் செரீஇ”

-பரிபா. 12:87-88

“. . . . . . . . . . . . . . . . . . . . . . . செந்தீ
 ஒண்பூம் பிண்டி ஒருகாது செரீஇ ”

-குறிஞ். 104-105


மக்களுக்கன்றி தெய்வத்திற்கும் இம்மலர் உகந்தது போலும். திருமுருகாற்றுப் படையில் முருகப் பெருமான், “செயலைத் தண்தளிர் துயல்வரு காதினன்” (206) என்பர் நக்கீரர். மற்று, மகளிரது உடல் நிறத்திற்கு இத்தளிர் உவமையாகக் கூறப்படுகின்றது.

“செயலை அந்தளிர் அன்ன என்
 மதனில் மா மெய் ”
-நற். 244 :10-11

இம்மரத்தின் தழையை மகளிர் தழையுடையாக்கி அணிந்து மகிழ்வர். தலைவன், இதன் தழையுடையைத் தலைவிக்கு வழங்குவதுமுண்டு. இங்ங்னம், இதன் தளிரும், தழையும் கொய்யப் பட்டதால் மரமே மொட்டையாகி விட்டதென்றார் ஒரு புலவர்.

 

  1. திணைமா. நூ. 63 :1-2
  2. பெரி. திரு: 2-9