பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

258

சங்க இலக்கியத்

மூவேந்தரும் தத்தம் குடிப் பூவை உரிமை மலராக மிக மதித்தனர்; போற்றினர்; குடிப்பெருமை கொண்டனர். இவ்வுரிமை தனி உரிமையாகாமல் குடிக்குரிய பொது உரிமையாகவே இருந்தது. ஒரு குடியைச் சேர்ந்த மன்னர் பிரிந்தாலும், பகைத்தாலும் குடிப் பூவை விட்டாரிலர்; மாற்றிக் கொண்டாரிலர். சோழன் நலங்கிள்ளியும், சோழன் நெடுங்கிள்ளியும் பிரிந்தனர். பகைத்தனர்; அந்நிலையிலும், இரு பெருஞ்சோழ மன்னர்களும் தமக்குரிய ஆத்தி மலரைச் சூடிக் கொண்டு போருக்கு எழுந்தனர். சோழன் நலங்கிள்ளி உறையூரை முற்றுகையிட்டான். சோழன் நெடுங்கிள்ளி அடைபட்டிருந்தான். இவ்விரு சோழவேந்தர்களையும் சந்து செய்விக்கத் துணிந்தார் புலவர் கோமான், கோவூர் கிழார். உறையூர் முற்றியிருந்த நலங்கிள்ளியை நோக்கிக் கூறுகிறார்.

“சோழவேந்தே! நின்னொடு பொருபவன் கண்ணியில் பனையினது வெளிய தோடில்லையாதலின் அவன் சேரனும் அல்லன்; கரிய கோட்டினை உடைய வேம்பின் தாரணியாமையின் அவன் பாண்டியனும் அல்லன். நின்னுடைய கண்ணியும் ஆத்திப் பூவாற் கட்டப்பட்டது. நின்னுடன் பொர எழுந்தவன் கண்ணியும், ஆத்தி மலரால் செறிக்கப்பட்டுள்ளது. இருவரும் வெல்லுதல் என்பதும் இயலாது. ஒருவர் தோற்பினும், தோற்பது ஆத்தி சூடிய நுங்குடியன்றோ? அச்செயல் நுங்குடிக்குத் தக்கதன்று. ஆகவே, நீவிர் போரிடுதல் தகாது” என்று கூறி இருவரையும் போரிடாமல் சந்து செய்தார்.

“இரும்பனை வெண்தோடு மலைந் தோனல்லன்
 கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்
 நின்னகண்ணியும் ஆர்மிடைந் தன்றே; நின்னொடு
 பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே
 ஒருவீர் தோற்பினும் தோற்ப துங்குடியே
 இருவீர் வேறல் இயற்கையுமன்றே அதனால்
 குடிப்பொருள் அன்றுநும் செய்தி, கொடித்தேர்
 நும்மோ ரன்ன வேந்தர்க்கு
 மெய்ம்மலி உவகை செய்யும் இவ்விகலே”
-புறநா. 45

காலப்போக்கில், ‘ஆர்’ ஆட்சி அருகி, ‘ஆத்தி’ ஆட்சி பெருகிற்று. உலக வழக்கில் இரண்டும் உலவின. ஆத்திச் சிறு மரம், காட்டாத்தி எனவும் திருவாத்தி எனவும் கூறப்படும்.

சேக்கிழார் இதனைத் திருவாத்தி என்பர். திருச்செங்காட்டாங்குடித் திருக்கோயிலின் திருமரம் காட்டாத்தி எனப்