பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

ஆர்—மந்தாரம்
பாகினியா பர்பூரியா (Bauhinia purpurea, Linn.)

சங்க இலக்கியங்கள் கூறும் ‘ஆர்’ என்பது ‘ஆத்தி’ மரமாகும். இதில் ‘திருவாத்தி’ எனவும், ‘காட்டாத்தி’ எனவும் இருவகையுண்டு. திருவாத்தியைப் பிற்கால இலக்கியங்கள் ‘மந்தாரம்’ என்றும் ‘திருவாட்சி’ என்றும் கூறுகின்றன. இது ஒரு சிறு மரம்; வெளிர் மஞ்சள் நிறமான மணமுள்ள பூக்களை உடையது.

சங்க இலக்கியப் பெயர் : ஆர், ஆத்தி
பிற்கால இலக்கியப் பெயர் : மந்தாரம்
உலக வழக்குப் பெயர் : திருவாத்தி, திருவாட்சி, கொக்கு மந்தாரை, வெள்ளை மந்தாரை, மந்தாரை.
தாவரப் பெயர் : பாகினியா பர்பூரியா
(Bauhinia purpurea, Linn.)

ஆர்—மந்தாரம் இலக்கியம்
மந்தாரம், கற்பகம். சந்தானம், அரிசந்தானம், பாரிசாதம் எனும் ஐந்தும் தேவருலகத்திலிருந்து பெறப்பட்டவை என்று புராணங்கூறும். கற்பகத்தை, உத்தரகுருவிலிருந்து கொணர்ந்தார் என்று உரைக் குறிப்பெழுதுகின்றார்.ஆசிரியர் நச்சினார்க்கினியர் [1]. கண்ணகிக்குக் கோயில் கட்ட வேண்டிக் கல்லெடுக்க வஞ்சினம் கூறும் செங்குட்டுவன் ‘கல் தாரான் எனில் அவன் மந்தாரமொடு, விறல் மாலை சூடுவதைப் பார்க்கிறேன்’ என்கிறான்.

“அலர் மந்தாரமோடு ஆங்குஅயல் மலர்ந்த
 வேங்கையொடு தொடுத்த ஓங்குவிறல் மாலை”
[2]

 

  1. சீ. சிந்: 1710
  2. சிலப் : 26 : 133