பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

279

“கடி ஏர்பூட்டுநர் கடுக்கை மலைய”-பதிற். 43 : 16

(கடுக்கை-கொன்றை)

போர்க்களத்து வீரரும் பனங்குருத்தைப் பிளந்த மடலுடன் கொன்றையைச் சூடினர்.

“நாறு இணர்க் கொன்றை வெண்போழ்க் கண்ணியர் ”
-பதிற். 67 : 13


கொன்றை மலர் சிவபெருமானுக்கு உரியதாக்கப்பட்டது. சிவ பரம் பொருளுக்குரிய பூக்களில் கொன்றையே முதலிடம் பெற்றது. சங்க இலக்கியங்களில் சிவபெருமானை வாழ்த்தும் பாடல்களில் எல்லாம் சிவன் கொன்றை மலரைக் கண்ணியாகவும், தாராகவும், மாலையாகவும் சூடியிருப்பதாகக் கூறப்படுகின்றது. சிவனைக் கொன்றை வேய்ந்தான் என்பர்.

“கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த்
 தாரன், மாலையன், மலைந்த கண்ணியன்”

-அகநா. 1 : 1-2

“எரி எள்ளுஅன்ன நிறத்தின் விரிஇணர்க்
 கொன்றையம் பைந்தார் அகலத்தன்”
-பதிற். 1 : 1-2

“கொலை உழுவைத் தோல் அசைஇ
 கொன்றைத்தார் சுவல் புரள ”
-கலித். 1 : 11
(சுவல்-தோள்)

“கண்ணி கார்நறுங் கொன்றை காமர்
 வண்ண மார்பிற் தாருங் கொன்றை ”
-புறநா. 1 : 1-2

“கொன்றை வேய்ந்த செல்வன் இணையடி”
-தொல். பொருள். செய். 149 : பேரா. உரை


பாரதக் கதையில், எதிரிகளால் சூழப்பட்டு நிற்கும் அபிமன்யுவிற்காக வீமன் புகுந்தான். அவனைத் தடுக்க நினைத்த சயத்திரதன் சிவனிடத்துப் பெற்ற கொன்றையை வீமன் எதிரே ஏவினான். வீமன் அம்மாலையைக் கண்ட அளவில், கை தொழுது வீழ்ந்தான். இது கண்ட திட்டத்துய்மன் வீமனைப் பழித்தான். அதற்கு வீமன் அம்மாலையின் பெருமையைப் பேசுகின்றான் :

“எங்கள் குடிப்பிறந்தார் எல்லாம் இறந்தாலும்,
 சங்கரன் நன்மாலைதனைக் கடவோம்”
[1]

 

  1. பாரத வெண்பா : துரோண பருவம்