பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

307

தாவரப் பேரினப் பெயர் : என்டெரலோபியம் (Enterolobium)
தாவரச் சிற்றினப் பெயர் : சமான் (saman)
உலக வழக்குப் பெயர் : கருவாகை
தாவர இயல்பு : மிக உயர்ந்து, மிகவும் பரவிக் கிளைத்துச் செழித்து எங்கும் வளரும் பெரிய மரம்.
இலை : கூட்டிலை நீளமானது. பல சிற்றிலைகள் காம்பில் இறகன்ன அமைந்து உள்ளன.
மஞ்சரி : கிளை நுனியில் இலைக்கோணத்தில் கொத்தாக உண்டாகும் பூந்துணர்.
மலர் : செந்நீல நிறமானது. வாகையைப் பெரிதும் ஒத்தது. தாதிழைகள் பல மிக நீளமானவை. பளபளப்பானவை. செந்நீல நிறமானவை.
கனி : மிக நீளமானது பாட் (pod)எனப்படும். பெரு முழவடிக்கும் கோல் போன்றது. கருமையானது. கால்நடைகளால் விரும்பி உண்ணப்படுவது.

இதன் பட்டை கரிய நிறமானது. இதனால் இப்பெயர் பெற்றது . அடிமரம் மிகப் பெரியதாயினும் வலியற்றது. விறகுக்குத் தான் பயன்படும். இம்மரம் தென்னமெரிக்க நாட்டிலிருந்து நமது நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டது என்று கூறுவர் காம்பிள். இம்மரம் நல்ல நிழல் தருவதாகலின், சோலைகளிலும், சாலைகளிலும் வளர்க்கப்படுகிறது. இரவில் இதன் சிற்றிலைகள் அடிப்புறமாக மடிந்து கூம்பியிருக்கும்! இவ்வியல்பை ‘நாக்டர்னல் மூவ்மென்ட்’ (Nocturnal movement) என்பர். இதனால் இது ‘தூங்கு மூஞ்சி மரம்’ எனப்படும்.