பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

மருதம்
டெர்மினாலியா அர்ச்சுனா (Terminalia arjuna,W.A.)

தமிழ் இலக்கியம் கண்ட ஐம்புலத்துள் மருதமும் ஒன்று. இது வயலும் வயலைச் சார்ந்த இடமுமாகும். இப்புலத்தில் வளரும் மருத மரத்தை வைத்தே இந்நிலம் இப்பெயர் பெற்றது போலும். மருதமரம் உயர்ந்து பருத்து வளரும். இதன் அடிமரம் மிகவும் பருத்திருக்கும். இம்மரம் காவிரி, வையை முதலிய ஆறுகளின் கரைகளில் வளர்வதைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

சங்க இலக்கியப் பெயர் : மருதம்
உலக வழக்குப் பெயர் : வெள்ளை மருது, கரு மருது, பில்ல மருது.
தாவரப் பெயர் : டெர்மினாலியா அர்ச்சுனா
(Terminalia arjuna,W.A.)

மருதம் இலக்கியம்

தொல்காப்பியம் மருத நிலத்தை “வேந்தன் மேய தீம்புனல் உலகம்” (தொல். பொருள். அகத். 5) என்று கூறும். வயலும் வயலைச் சார்ந்த இடமும் மருதம் எனப்படும். ஊடலும் ஊடல் நிமித்தமும் உரிப்பொருளாக உடைய மருத நிலத்தை ‘மருதஞ் சான்ற மருதத் தண்பணை’ என்பர் (சிறுபா.186). இதற்கு உரை கூறிய நச்சினார்க்கினியர் ‘ஊடியும் கூடியும் போகம் நுகரும் தன்மை அமைந்த மருத நிலத்தில் குளிர்ந்த வயலிடத்து’ என்பார். மேலும் இப்பொருளைத் தொல்காப்பியம் அகத்திணையியல் நூற்பா (5) உரையிலுங் கூறுவர். சங்க இலக்கியத்தில் மருதத் திணையில் அமைந்துள்ள பாக்கள்:

1. அகநானூறு - ஆறாம் எண்ணுள்ள ..
40 பாக்கள்
2. கலித்தொகை - மருதக்கலி ..
30 பாக்கள்
3. ஐங்குறுநூறு - மருதம் ..
100 பாக்கள்