பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

நாவல்
சைசீஜியம் ஜாம்பொலானம்
(Syzygium jambolanum,DC.)

கடலோரத்திலிருந்து ஆறாயிரம் அடி உயரமான மலைப் பாங்கு வரையில் வளரும் பசிய தழைத்த கிளைத்த வலிய பெருமரம் நாவல் மரம். கருமையான இனிய பழங்களை உதிர்க்கும்.

சங்க இலக்கியப் பெயர் : நாவல்
தாவரப் பெயர் : சைசீஜியம் ஜாம்பொலானம்
(Syzygium jambolanum,DC.)

நாவல் இலக்கியம்

“நாவலந் தண்பொழில் வடபொழில் ஆயிடை-பரிபா. 5:8
நாவலம் தண்பொழில் வீவுஇன்று விளங்க-பெரும். 465
பொங்கு திரைபொருத வார்மணல் அடைகரைப்
 புன்கால் நாவல் பொதிப்புற இருங்கனி
 கிளைசெத்து மொய்த்த தும்பி
-நற். 35:1-3

என்றெல்லாம் சங்க இலக்கியங்களில் கூறப்படும் நாவல் மரம் வலியது. தழைத்து, கிளைத்துப் பரவி வளரும் இப்பெரிய மரம், தமிழ் நாட்டில் எங்கும் காணப்படுகிறது. மேலே காட்டிய பெரும் பாணாற்றுப்படையின் அடிக்கு, ‘நாவலில் பெயர் பெற்ற அழகினை உலகமெல்லாம் கேடின்றாக விளங்கும்படி’ என்று நச்சினார்க்கினியர் உரை கூறுகின்றார். இம்மரம் கடலோரப் பகுதிகளிலும் வளர்வதைப் புலவர் கூறுகின்றார். இதில் விளையும் நாவற்பழம் கருமை நிறமானது. இனிமையானது. இக்கனிகள் காற்றில் உதிர்வதைப் புலவர் கூறுவர்.

“காலின் உதிர்ந்த கருங்கனி நாவல்-மலைப. 135